பாகிஸ்தானுக்காக கர்நாடகா மாநிலம் உடுப்பில் உளவு பார்த்ததாக உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டெல்லி செங்கோட்டை அருகே கார் குண்டு வெடிப்பு சம்பவம் நவம்பர் 10-ந் தேதி நிகழ்ந்தது. இது தற்கொலைப் படை தாக்குதல் என விசாரணை அமைப்பான NIA தெரிவித்துள்ளது. டெல்லி செங்கோட்டை தாக்குதலில் 14 பேர் உயிரிழந்தனர்.
இத்தாக்குதலைத் தொடர்ந்து நாடு முழுவதும் தீவிரவாதிகளையும் அவர்களுக்கு உதவும் கும்பலையும் மாநிலங்களில் போலீசார் சுற்றி வளைத்து அதிரடியாக கைது செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் கர்நாடகா மாநிலம் உடுப்பியில் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த 2 பேர், சந்தேகத்தின் அடிப்படையில் சிக்கினர். இவர்கள் கப்பல் கட்டுமான நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்தனர்.
மேலும் இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கப்பல் கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டே இந்திய கடற்படையின் நடமாட்டம் உள்ளிட்டவை தொடர்பாக பாகிஸ்தான் உளவு அமைப்புக்கு தகவல்களை அனுப்பி வந்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து உ.பி.யைச் சேர்ந்த ரோகித், சாந்திரி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் NIA அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர்.
