அமெரிக்காவின் தீவிர அழுத்தத்துக்கு மத்தியில் இன்று (டிசம்பர் 5) பிரதமர் மோடியும் ரஷ்ய அதிபர் புதினும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன்பின் இந்தியாவிற்கு தடை இல்லா எரிபொருள் வழங்கப்படும் என்று புதின் தெரிவித்துள்ளார்.
இரண்டு நாள் பயணமாக ரஷ்ய அதிபர் புதின் நேற்று மாலை இந்தியா வந்தார்.
இந்த நிலையில் இன்று ஹைதராபாத் இல்லத்தில் சந்தித்து பிரதமர் மோடியும் புதினும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து இரு தலைவர்களும் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது ரஷ்யா அதிபர் கூறுகையில், எண்ணெய், எரிவாயு, நிலக்கரி என இந்தியாவின் எரிசக்தி வளர்ச்சிக்கு தேவையான அனைத்தையும் மாஸ்கோ வழங்கும். வளர்ந்து வரும் இந்திய பொருளாதாரத்துக்கு தடையில்லா எரிபொருள் ஏற்றுமதியை தொடர நாங்கள் தயாராக இருக்கிறோம்.
பாதுகாப்பு, பொருளாதாரம் வர்த்தகம் மற்றும் கலாச்சாரத் துறைகளில் இரு தரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த நாங்கள் தீர்மானித்துள்ளோம்.
புதிய சர்வதேச தளவாட வழித்தடங்களை உருவாக்க ரஷ்யாவும் இந்தியாவும் இணைந்து செயல்படுகின்றன.
இருதரப்பு ஒத்துழைப்பை முன்னேற்றுவதில் பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் ஈடுபாடு காட்டுகிறார்.
செயற்கை நுண்ணறிவு, விமான மேம்பாடு, உயர் தொழில்நுட்பம், விண்வெளி ஆய்வு ஆகியவற்றில் இரு நாடும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன” என்று தெரிவித்தார்.
பிரதமர் மோடி பேசுகையில், பொருளாதார ஒத்துழைப்பு திட்டத்தை 2030-ம் ஆண்டு வரை தொடர நாங்கள் ஒப்புக் கொண்டிருக்கிறோம். இரு நாடுகளிடையே சுகாதாரம், கப்பல், போக்குவரத்து ரசாயனங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இன்று ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது.
இந்தியா மீதான ரஷ்ய அதிபர் புதினின் அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
எரிசக்தி பாதுகாப்பு இந்திய ரஷ்யா கூட்டாண்மையின் வலுவான மற்றும் முக்கியமான தூணாக விளங்குகிறது என்று கூறினார்.
அதேசமயம் உக்ரைன் மீது ரஷ்யா ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டும் வரும் நிலையில் இந்த விவகாரத்தில் இந்தியா நடுநிலை வகிக்கவில்லை அமைதியின் பக்கம் நிற்கிறது என்று ரஷ்ய அதிபரிடம் பிரதமர் மோடி இந்தியாவின் நிலைப்பாட்டை கூறியிருக்கிறார்.
