கலைஞர் பெயரில் கும்பகோணத்தில் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார். University named kalaignar Karunanidhi
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இன்றைய (ஏப்ரல் 24) தினம், கலைஞர் பெயரில் ஒரு பல்கலைக் கழகம் அமைக்க வேண்டும் என்று அதிமுக, பாஜக தவிர்த்து அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள் சார்பில் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
இந்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது பேசிய காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, “எல்லா திறமையும் பெற்ற ஒரு தலைவராக ஆளுமையாக வாழ்ந்தவர் கலைஞர். இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். ஜனநாயகத் தலைவர் கலைஞர் பெயரில் ஒரு பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும்.” என்று தெரிவித்தார்.
பாமக சட்டமன்ற குழுத் தலைவர் ஜி.கே.மணி, “எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என எல்லா தலைவர்களின் பெயரிலும் பல்கலைக் கழகங்கள் உள்ளன. கலைஞரின் பெயரிலும் கொண்டு வர வேண்டும்” என்றார்.
இதையடுத்து பேசிய தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், “நம்முடைய உறுப்பினர்கள் கு.செல்வப்பெருந்தகை , ஜி.கே. மணி, சிந்தனைச் செல்வன், வீ.பி. நாகைமாலி, இராமச்சந்திரன் , டாக்டர் சதன் திருமலைக்குமார், முனைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, ரா.ஈஸ்வரன்,தி.வேல்முருகன், பின்னர் அவர்களைத் தொடர்ந்து நம்முடைய அவை முன்னவர், அதேபோல், பேரவைத் தலைவர் ஆகியோர் விதி எண் 55-ஐப் பயன்படுத்தி முத்தமிழறிஞர் கலைஞருடைய பெயரால் ஓர் பல்கலைக்கழகத்தை உருவாக்க வேண்டுமென்று தங்களுடைய கருத்துக்களை உணர்வுபூர்வமாக எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். University named kalaignar Karunanidhi
தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய பள்ளிகளாக இருந்தாலும், கல்லூரிகளாக இருந்தாலும், அவையெல்லாம் இன்றைக்கு வளர்ந்து, மேலோங்கி மற்ற மாநிலங்களுக்கெல்லாம் எடுத்துக்காட்டாக, ஏன், உலக அளவிலே இன்றைக்குப் பாராட்டப்படக் கூடிய அளவிற்கு வளர்ந்திருக்கின்றன. நாட்டிலேயே முதல் இடத்திற்கு வந்திருக்கக்கூடிய அந்தக் கல்வி நிலையங்கள் எல்லாம் உருவாவதற்குக் காரணமாகப் பல்வேறு தலைவர்கள் இருந்தாலும், அவர்களிலே முக்கியமான தலைவர்களில் ஒருவராக கலைஞர் விளங்கிக் கொண்டிருக்கிறார்.
அப்படி கல்வியின் வளர்ச்சிக்குப் பாடுபட்டிருக்கக்கூடிய, பல்வேறு திட்டங்களை உருவாக்கித் தந்திருக்கக்கூடிய நம்முடைய தலைவர் கலைஞருக்கு விரைவில் அவர் பிறந்த ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் இருக்கக்கூடிய கும்பகோணத்திலே, பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்படும் என்ற உறுதியான செய்தியை சொல்கிறேன்; எந்தவித தயக்கமுமின்றி இதைச் சொல்கிறேன் என்று சொல்லி நான் அமர்கிறேன்” என்று அறிவித்தார். University named kalaignar Karunanidhi