சர்ச்சைக்குரிய மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவதை மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம் என்று மத்திய அரசு திடீரென அறிவித்துள்ளது. Three-Language Policy Lok Sabha
மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை என்பது இந்தி மற்றும் சமஸ்கிருத மொழிகளை பிற மாநிலங்களின் மீது திணிக்கக் கூடிய நடவடிக்கை என கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நாடாளுமன்ற மக்களவையில் ஜூலை 21-ந் தேதி விருதுநகர் தொகுதி எம்பி மாணிக்கம் தாகூர் மற்றும் நாமக்கல் எம்பி மாதேஸ்வரன் ஆகியோர் எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய இணை அமைச்சர் ஜெயந்த் சவுத்ரி எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்: மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள், மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவதில் நெகிழ்வுத் தன்மையை கடைபிடிக்கலாம். அதாவது மொழிகளின் பன்முகத்தன்மை, நடைமுறைப்படுத்தும் சாத்தியங்கள் மற்றும் தேவைகளின் அடிப்படையில் மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகள் மும்மொழிக் கொள்கையை செயல்படுத்துவது குறித்து முடிவெடுக்கலாம்.
புதிய கல்விக் கொள்கை 2020- மும்மொழிக் கொள்கையை செயல்படுத்தும். அதே நேரத்தில், அரசியல் சாசன சரத்துகளைக் கருத்தில் கொண்டு மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவதில் நெகிழ்வுத் தன்மை கடைபிடிக்கப்படும்; எந்த ஒரு மாநிலத்தின் மீதும் எந்த ஒரு மொழியும் திணிக்கப்படமாட்டாது.
பாடத் திட்டங்கள் மற்றும் கல்வி கொள்கை உருவாக்கத்தில் கல்வியாளர்கள், மொழியியல் வல்லுநர்கள், மாநில- தேசிய அளவிலான கொள்கை வகுப்பாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றுடன் ஆலோனைகள் நடத்தப்படுகின்றன.
புதிய கல்விக் கொள்கை 2020 மற்றும் பள்ளி கல்விக்கான தேசிய பாடத் திட்ட கட்டமைப்பு 2023 ஆகியவற்றை உருவாக்குவதற்கு முன்பாக பல்வேறு தரப்பினருடன் பல்வேறு வகைகளில் கலந்து ஆலோசிக்கப்பட்டது. அதேபோல அனைத்து மாநில அரசுகள், யூனியன் பிரதேச அரசுகளுடனும் ஆலோசிக்கப்பட்டது.
பள்ளி கல்விக்கான தேசிய பாடத் திட்ட கட்டமைப்பு 2023 என்பது மாணவர்களை ஆகக் குறைந்தபட்சம் மூன்று மொழிகளில் சுதந்திரமான பேச்சாளராக,வாசிப்பாளராக, எழுத்தாளராக உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தைக் கொண்டது.
பள்ளி கல்விக்கான தேசிய பாடத் திட்ட கட்டமைப்பு 2023 -ன் கீழ், முதலாவது மொழி என்பது, தாய்மொழி அல்லது மாநில அரசின் மொழியைக் குறிக்கும்; 8 வயதுக்குள் இந்த மொழியில் குழந்தைகள் திறன் பெற வேண்டும்.
முதலாவது மொழிக்கு மாற்றானது 2-வது மொழி. இந்த மொழியில் 11 வயதுக்குள் மாணவர்கள் திறனைப் பெற்றிருக்க வேண்டும்.
முதல் மற்றும் 2-வது மொழிகளில் இருந்து வேறுபட்டது 3-வது மொழி. இந்த 3-வது மொழியில் 14 வயதுக்குள் மாணவர்கள் திறன் பெற்றிருக்க வேண்டும். இவ்வாறு மத்திய அமைச்சர் ஜெயந்த் சவுத்ரி தெரிவித்தார்.
