சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப் பணிக்கு நிதி ஒதுக்கீடு, இந்திய மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து, ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் உள்ளிட்ட பல்வேறு முக்கிய திட்டங்களுக்கு பிரதமர் மோடி தலைமையில் நேற்று (அக்டோபர் 3) நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அதுகுறித்து விரிவாக இங்கே காணலாம்.
சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு!
சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப் பணிகளானது கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் மிகவும் தாமதமாக நடைபெற்று வருகிறது.
இந்த திட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும் என்று ஆளும் திமுக அரசு தரப்பில் தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
அதன் தொடர்ச்சியாக கடந்த செப்டம்பர் 27- ஆம் தேதி டெல்லியில் பிரதமர் மோடியை முதலமைச்சர் ஸ்டாலின் சந்தித்து பேசினார். இதுதொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார்.
இந்த நிலையில், சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட பணிகளுக்கு ரூ.63,246 கோடி நிதிஒதுக்கி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மாதவரத்திலிருந்து சிப்காட் வரை 50 நிலையங்களுடன் 45.8 கிமீ நீள வழித்தடத்துக்கும் கலங்கரை விளக்கத்திலிருந்து பூந்தமல்லி பைபாஸ் வரை 30 நிலையங்களுடன் 26.1 கிமீ நீளம், மற்றும் மாதவரத்திலிருந்து சோழிங்கநல்லூர் வரை 48 நிலையங்களுடன் 47 கிமீ நீளம் என மூன்று வழித்தடங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்டம் முழுமையாகச் செயல்படுத்தப்பட்ட பின்னர் சென்னை மாநகரம் 173 கிமீ நீளமுள்ள மெட்ரோ ரயில் நெட்வொர்க்கைக் கொண்டிருக்கும்.
ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் தீபாவளி போனஸ்!
தீபாவளி பண்டிகை வரும் 31 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், மொத்தம் 11.72 லட்சம் ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்களுக்கான ஊதியம் போனசாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் மத்திய அரசுக்கு கூடுதலாக ரூ.2,029 கோடி செலவு ஏற்படும்.
இந்த போனஸ் தொகையானது ரயில்வேயில் பணியாற்றும் ரயில்வே டிராக் பராமரிப்பாளர்கள், லோகோ பைலட்கள், டிரெயின் மேனேஜர்ஸ், ஸ்டேஷன் மாஸ்டர்ஸ், சூப்பர்வைசர்ஸ், டெக்னிஷியன்ஸ், டெக்னிஷியன்ஸ் ஹெல்பர்ஸ், பாயின்ட்ஸ்மேன், அமைச்சரவை ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பு ஊழியர்களுக்கும் கிடைக்கும்.
அதாவது, மற்றும் பிற குரூப் XC ஊழியர்களுக்கும் இந்த போனஸ் கிடைக்கும். ரயில்வே ஊழியர்களின் சிறப்பான செயல்திறனை பாராட்டி மத்திய அமைச்சரவை இந்த தொகையை (PLB) வழங்க ஒப்புதல் தெரிவித்துள்ளது.
ஐந்து மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து!
மராத்தி, பெங்காலி, பாலி, பிராகிருதம், அசாமிஸ் என மேலும் 5 மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஏற்கனவே தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஒடியா ஆகிய 6 மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
தற்போது மேலும் 5மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டிருப்பதன் மூலம் இந்தியாவில் செம்மொழி அந்தஸ்து பெற்ற மொழிகளின் எண்ணிக்கை 11ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கடந்த 2004ஆம் ஆண்டு, முதல்முறையாக தமிழுக்குதான் செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டது. கடைசியாக, கடந்த 2014ஆம் ஆண்டு, ஒடியாவுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டது.
மேலும் மகாராஷ்டிரா தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மராத்திய மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டிருப்பது கவனம் பெற்றுள்ளது.
இரு வேளாண் திட்டங்கள் அறிவிப்பு!
மத்திய வேளாண் அமைச்சகத்தின்கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து மத்திய நிதியுதவித் திட்டங்களையும் ஒன்றிணைத்து 2 புதிய திட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
நிலையான விவசாயத்தை ஊக்குவிக்கும் பிரதமரின் தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம் (பிஎம்-ஆர்கேவிஒய்), உணவுப் பாதுகாப்பில் தன்னிறைவை அடைய கிருஷோன்னதி திட்டம் (கேஒய்) ஆகிய இரு புதிய திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
சுமார் ரூ.1,01,321.61 கோடி செலவில் மாநில அரசுகள் மூலம் இத்திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. மேலும், தங்களின் தேவைகளுக்கேற்ப நிதியைப் பயன்படுத்தி கொள்ள மாநிலங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
எண்ணெய் வித்துகள் இயக்கம்:
தேசிய சமையல் எண்ணெய்-எண்ணெய் வித்துகள் இயக்கத்தை அடுத்த 7 ஆண்டுகளில் ரூ.10,103 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
உள்நாட்டு எண்ணெய் வித்து உற்பத்தியை அதிகரித்தல் மற்றும் சமையல் எண்ணெயில் தன்னிறைவு இலக்கை அடைதல் ஆகியவற்றின் மூலம் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் அதேவேளையில் அந்நியச் செலாவணியைச் சேமிப்பது இந்த இயக்கத்தின் நோக்கமாகும்.
அதன்படி, கடந்த 2022-23-ஆம் ஆண்டில் 3.9 கோடி டன்னாக இருந்த எண்ணெய் வித்துகள் உற்பத்தியை 2030-31-ஆம் ஆண்டுக்குள் 6.97 கோடி டன்னாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கூடுதலாக 40 லட்சம் ஹெக்டேர்களுக்கு எண்ணெய் வித்து சாகுபடியை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இதையொட்டி, தரமான வித்துகள் சரியான நேரத்தில் மாநிலங்களுக்கு கிடைப்பதற்கு வலைதளம் (நஅபஏஐ) அறிமுகப்படுத்தப்படும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
”சனாதன தர்மத்தை அழிக்க நினைத்தால் அழிந்து போவீர்கள்”: உதயநிதியை மறைமுகமாக விமர்சித்த பவன் கல்யாண்
”இனிதே நடந்தேறிய மாநாடு பந்தகால் விழா!” – தொண்டர்களுக்கு விஜய் கடிதம்!