தமிழகத்தின் பல மாவட்டங்களில் கடந்த இரு தினங்களாகப் பெய்து வரும் கனமழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் தடையில்லா மின்சாரம் வழங்க முன்னுரிமை வழங்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதியளித்துள்ளார்.
செந்தில் பாலாஜியிடம் இருந்த மின்சாரத்துறை, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில், பொறியாளர்களுடன் மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத் தலைவர் ராஜேஷ் லக்கானி, மின் தொடரமைப்பு கழக மேலாண்மை இயக்குநர் மணிவண்ணன் மற்றும் உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.ஆய்வுக்கூட்டத்துக்குப் பிறகு பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு,
“மின்துறை பொறுப்பை முதலமைச்சர் எனக்கு மிகுந்த நம்பிக்கையுடன் வழங்கியுள்ளார். அந்த நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் எனது செயல்பாடுகள் இருக்கும். தமிழகத்தில் தடையில்லா மின்சாரம் வழங்க முன்னுரிமை அளிக்கப்படும்.
மழைக்காலங்களில் மின் கசிவால் ஏற்படும் விபத்துகளை தவிர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பெய்த மழையால் ஏற்பட்ட மின் தடையை போர்கால அடிப்படையில் சரிசெய்ய அறிவுறுத்தி உள்ளேன்” என்று கூறினார்.
ராஜ்
டிஜிட்டல் திண்ணை: உதயநிதி-சபரீசன் உரசல்: வசமாய் சிக்கிய செந்தில்பாலாஜி
மதுரை ரயில் நிலையத்தில் மீன் சின்னம்: தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்!