எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பிற்கான ஆன்லைன் பதிவு நாளை (ஜூன் 28) தொடங்க உள்ளது.
இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு கடந்த மே 7 ஆம் தேதி நடைபெற்றது. நாடு முழுவதும் 13 மொழிகளில் நடைபெற்ற இந்த தேர்வை 20 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் எழுதினர்.
தொடர்ந்து நீட் தேர்வு முடிவு கடந்த 13 ஆம் தேதி வெளியானது. இதில் நாடு முழுவதும் 11,45,976 பேர் தேர்ச்சி பெற்றனர். தமிழகத்தில் இருந்து விண்ணப்பித்த 1 லட்சத்து 44,516 பேரில் 78,693 பேர் தகுதி பெற்றனர்.
இதில் தமிழகத்தை சேர்ந்த பிரபஞ்சன் என்ற மாணவன் இந்திய அளவில் 99.99 சதவீத மதிப்பெண்களுடன் முதல் இடம் பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் எம்பிபிஎஸ் பிடிஎஸ் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு நாளை (ஜூன் 28) முதல் ஆன்லைனில் பதிவிடலாம் என்று தமிழ்நாடு அரசு மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகம் அறிவித்துள்ளது.
நாளை முதல் ஜூலை 10 ஆம் தேதி மாலை 5 மணி வரை www.tnhealth.tn.gov.in மற்றும் www.medicalselection.org என்ற இணையத்தளங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து ஜூலை 2வது வாரத்தில் மருத்துவ கலந்தாய்வு நடைபெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மோனிஷா