ஓ.பன்னீர் செல்வத்துடன் இணைந்து செயல்படுவோம்: டிடிவி தினகரன்
அதிமுகவில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்திருந்த நிலையில், அவரது கருத்தை வரவேற்கிறேன் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இன்று காலை சென்னை கிரீன்வேஸ் சாலையில் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் கட்சியின் நலன் கருதி, சசிகலா, டிடிவி தினகரன், எடப்பாடி பழனிசாமி அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்று தெரிவித்தார்.
எடப்பாடி பழனிசாமி அதற்கு மறுப்பு தெரிவித்து, ஓ.பன்னீர் செல்வத்துடன் இணைந்து செயல்பட முடியாது என்றார்.
இந்த நிலையில், ஓ.பன்னீர் செல்வத்தின் கருத்தை வரவேற்பதாக டிடிவி தினகரன் ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “தீயசக்தியான தி.மு.க.வை வீழ்த்துவதற்கு அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் இணக்கத்துடன் செயல்படவேண்டும் என்ற திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் கருத்தை சுயநலமற்ற, ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள எவர் ஒருவரும் வரவேற்கவே செய்வார்கள்.
அதேசமயம், சுயநலத்தின் உச்சமாக, பதவி வெறிபிடித்தாடும், துரோக சிந்தனை உடைய ஒரு கும்பல் நல்லதை எப்போதும் ஏற்காது என்பதும் அனைவரும் அறிந்ததே” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
ஓ.பி.எஸ் உடன் ஒத்து போக முடியாது : எடப்பாடி உறுதி!