எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்ட உக்ரைன் முன்னாள் அதிபர்!

Published On:

| By Selvam

உக்ரைனில் இருந்து புறப்பட்டு சென்ற முன்னாள் அதிபர் பெட்ரோ போரோஷென்கோ எல்லையில் தடுத்து திருப்பி அனுப்பப்பட்டார்.

உக்ரைன் – ரஷ்யா போர் நடைபெற்று வரும் நிலையில், உக்ரைன் முன்னாள் அதிபர் பெட்ரோ போரோஷென்கோ  வெளிநாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடிவு செய்தார். இந்தச் சுற்றுப்பயணத்தின்போது அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் மைக் ஜான்சனை சந்திக்கவும், போலந்து நாடாளுமன்றத்துக்குச் செல்லவும் திட்டமிட்டிருந்தார். அதன் பின்னர் ஹங்கேரி பிரதமர் விக்டர் ஆர்பனை சந்திக்க முடிவு செய்ததாகவும் தகவல் வெளியானது.

ரஷ்ய அதிபர் புதினை ஹங்கேரி பிரதமர் ஆர்பன் பாராட்டியதோடு, ஐரோப்பிய ஒன்றியத்தில் சேருவதற்கான உக்ரைன் அரசின் முயற்சியை ஆதரிக்க மறுத்தவர். இதனால் உக்ரைன் அரசு அவர் மீது அதிருப்தியில் உள்ளது. இந்த நிலையில், உக்ரைனில் இருந்து நேற்று புறப்பட்ட பெட்ரோ போரோஷென்கோ எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டார்.

ஹங்கேரி பிரதமரை சந்திக்க திட்டமிட்டதால் முன்னாள் அதிபர் பெட்ரோ போரோஷென்கோ நாட்டை விட்டு வெளியேறுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாடாளுமன்ற அனுமதி இருந்தும் தன்னை திருப்பி அனுப்பியதாகவும், எல்லையில் தனக்கு நேர்ந்தது, ஒற்றுமை மீதான தாக்குதல் என்றும் போரோஷென்கோ கூறினார்.

ஆனால், ஹங்கேரி பிரதமர் ஆர்பனை சந்திக்க திட்டமிட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. உக்ரைன் ராணுவ சட்டத்தின்படி, 18 வயது முதல் 60 வயதுக்குட்பட்ட ஆண்கள் சிறப்பு அனுமதி பெறாவிட்டால் நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட மாட்டார்கள். பெட்ரோ போரோஷென்கோவின் வயது 58 என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

தண்ணீரில் தரையிறங்க முடியாது: தற்காலிகமாய் மூடப்பட்ட சென்னை விமான நிலையம்!

மிசோரம் தேர்தல்: வெற்றி கணக்கை துவங்கிய ஜோரம் மக்கள் இயக்கம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share