ரஷ்யா உக்ரைன் மீது தொடுத்துள்ள போர் 115 நாட்களை தாண்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தப் போரால் ஏற்கனவே ஆயிரக்கணக்கான பொதுமக்களும் ராணுவ வீரர்களும் இறந்துள்ளனர். இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வர பல மேற்கத்திய நாடுகள் முயற்சிகள் செய்த போதிலும், ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதல் நடத்துவதில் முனைப்பாக உள்ளது. இந்நிலையில் 10,000 முக்கிய ராணுவ வீரர்களுக்கு 120 நாட்களுக்கு பயிற்சி அளிக்கும் திட்டம் குறித்து பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
இந்த போர் தொடங்கிய பின் நேற்று இரண்டாவது முறையாக உக்ரைனுக்கு பயணம் மேற்கொண்ட பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன், கீவ் நகருக்கு சென்றார். அப்பொழுது அவர் உக்ரைன் ராணுவ வீரர்களுக்கான பயிற்சி திட்டத்தை முன் மொழிந்தார்.
இந்த போரில் உக்ரைன் நாட்டுக்கு, அமெரிக்க நாட்டுடன் பல மேற்கத்திய நாடுகள் ஆதரவளித்து வருகின்றன. உணவு, மருந்துகள் மற்றும் ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றன. உக்ரைன் நாட்டிற்கு ஆயுத உதவிகளை வழங்க கூடாது என்று ரஷ்ய அதிபர் புடின் எச்சரித்த போதிலும், அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவி தொடர்ந்து வழங்கி வருகின்றன.
இந்நிலையில் தற்பொழுது பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் இராணுவப் பயிற்சித் திட்டத்தை முன்மொழிந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து போரிஸ் ஜான்சன் தனது டிவிட்டர் பக்கத்தில், “உக்ரைனின் ராணுவத்தில் உள்ள ஆயிரக்கணக்கான படை வீரர்களுக்கு, பெரிய அளவிலான பயிற்சியை இங்கிலாந்து வழங்க இருக்கிறது. உக்ரைனுடன் துணை நிற்போம்!” என்று பதிவிட்டுள்ளார்.
