“வெளிநாட்டுக்குப் போய் படிக்கணும்… அதுவும் லண்டன்ல படிச்சா கெத்து!” என்று கனவு காணும் இந்திய மாணவர்களுக்கு இங்கிலாந்தில் இருந்து ஒரு முக்கியமான செய்தி வந்திருக்கிறது.
இங்கிலாந்து அரசு தனது புதிய ‘சர்வதேச கல்வி உத்தி 2026’ (International Education Strategy) அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. அதில், “எங்களுக்கு இந்திய மாணவர்கள்தான் முக்கியம்” என்று வெளிப்படையாகவே அறிவித்திருக்கிறார்கள். ஆனால், இதில் சில மாற்றங்களும் இருக்கின்றன.
என்னது அந்த 40 பில்லியன் திட்டம்? இங்கிலாந்தின் பொருளாதாரத்தை உயர்த்த, கல்வித்துறையை ஒரு முக்கிய ஆயுதமாக மாற்றத் திட்டமிட்டுள்ளது அந்நாட்டு அரசு. அதன்படி, 2030ஆம் ஆண்டிற்குள் கல்வி ஏற்றுமதி மூலம் 40 பில்லியன் பவுண்டுகள் (சுமார் ரூ.4 லட்சம் கோடி) வருமானம் ஈட்ட இலக்கு நிர்ணயித்துள்ளனர்.
இதற்காக அவர்கள் தேர்ந்தெடுத்திருக்கும் 5 முக்கிய நாடுகளில் (Focus Countries) இந்தியாவும் ஒன்று!
எதுக்கு இந்த மாற்றம்? முன்பு, “வருஷத்துக்கு 6 லட்சம் வெளிநாட்டு மாணவர்களைச் சேர்க்க வேண்டும்” என்று ஒரு டார்கெட் வைத்திருந்தார்கள். அந்த இலக்கை அவர்கள் ஏற்கனவே அடைந்துவிட்டதால், இப்போது ‘எண்ணிக்கை முக்கியமல்ல… தரம் தான் முக்கியம்’ என்ற முடிவுக்கு வந்துள்ளனர். அதாவது, இனிமேல் சும்மா எல்லாரையும் விசா கொடுத்துக் கூப்பிட மாட்டார்கள்.
திறமையான, உண்மையான படிப்பு ஆர்வம் கொண்ட மாணவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை கிடைக்கும்.
இந்தியர்களுக்கு என்ன லாபம்?
- உள்ளூர்லேயே லண்டன் டிகிரி: இங்கிலாந்து பல்கலைக்கழகங்கள் நேரடியாக இந்தியாவிலேயே கிளைகளை (Overseas Campuses) திறக்க ஊக்குவிக்கப்படும். (ஏற்கனவே சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழகம் குருகிராமில் கிளை திறக்க இருப்பது குறிப்பிடத்தக்கது). இதனால், லண்டன் போகாமலேயே இங்கிலாந்து டிகிரி வாங்கலாம். செலவு மிச்சம்!
- வேலைவாய்ப்பு: திறமையானவர்களுக்கு விசா நடைமுறைகளில் சில சலுகைகள் கிடைக்கலாம்.
லண்டன்ல படிக்க ஆசைப்படுறது தப்பில்லை. ஆனா, ‘யார் மூலமாவது விசா வாங்கினா போதும்’னு நினைக்காதீங்க. இங்கிலாந்து அரசு இனிமேல் ‘ஜெனுவின் ஸ்டூடண்ட்’ (Genuine Student) யாருனு பார்த்துதான் சீட் கொடுக்கும்.
ஏஜெண்டுகளை நம்பிப் பணத்தை ஏமாற வேண்டாம். அப்புறம், அங்க போய் பார்ட் டைம் வேலை பார்க்கலாம்னு மட்டும் கணக்கு போடாம, படிப்பை முடிச்சுட்டு நல்ல வேலைக்குப் போற வழியைப் பாருங்க. இது நம்ம டைம் பாஸ்!
