நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு வேக வேகமாக தயாராகி வருகின்றன.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று ஜூலை 28ஆம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து நடை பயணத்தை தொடங்குகிறார். ஆகஸ்ட் 20ஆம் தேதி அதிமுக சார்பில் மதுரையில் மாநாடு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் ஜூலை 26 ஆம் தேதி டெல்டா மண்டலத்தின் திமுக பாகப் பொறுப்பாளர்கள் கூட்டத்தையே மாநாடு போல நடத்தி இருக்கிறார்.
அடுத்தடுத்து நான்கு மண்டலங்களில் இதேபோல பாகப் பொறுப்பாளர்கள் மாநாட்டை நடத்த இருக்கிறது திமுக. இன்னொரு பக்கம் ராமேஸ்வரத்தில் ஆகஸ்ட் 18ஆம் தேதி மீனவர்கள் மாநாட்டில் முதலமைச்சர் கலந்து கொள்கிறார்.
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க நாடாளுமன்றத் தேர்தலுக்கு தொண்டர்களையும் நிர்வாகிகளையும் தயார் படுத்தும் வகையில் பிரம்மாண்ட மாநாட்டையும் நடத்த திட்டமிட்டுள்ளது திமுக.
அக்கட்சியின் தலைமை கழகம் சார்பில் பல மாநாடுகள் இதுவரை நடத்தப்பட்டு இருந்தாலும்… இளைஞர் அணி சார்பாக இதுவரை ஒரே ஒரு மாநாடு தான் நடத்தப்பட்டுள்ளது.
2007 டிசம்பர் மாதம் திருநெல்வேலியில் திமுக இளைஞரணி வெள்ளிவிழா மாநாடு நடைபெற்றது. அப்போதைய இளைஞரணி செயலாளர் மு. க. ஸ்டாலின் மாநாட்டுக்கு முழு பொறுப்பேற்று நடத்தினார்.
அதேபோல இப்போது இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்று இளைஞர் அணி இரண்டாவது மாநாட்டை நடத்த திட்டமிட்டு இருக்கிறார்.
மாநாட்டை எங்கே நடத்துவது என்ற ஆலோசனையில் கொங்கு மண்டலத்தில் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது. கோவை, சேலம், ஈரோடு, தர்மபுரி ஆகிய மாவட்டங்கள் பரிசீலிக்கப்பட்டு தற்போது சேலத்தில் திமுக இளைஞரணியின் இரண்டாவது மாநாட்டை நடத்த திட்டமிட்டு இருக்கிறார் உதயநிதி.
அனேகமாக 2023 நவம்பர் மாதம் இளைஞர் அணி மாநாடு சேலத்தில் நடைபெறும் என்கிறார்கள் உதயநிதிக்கு நெருக்கமானவர்கள்.
இந்த மாநாட்டின் மூலம் நாடாளுமன்ற தேர்தலுக்கு திமுக தயாராவது மட்டுமல்ல… கட்சிக்குள் உதயநிதியின் அடுத்த கட்ட உயரமும் இருக்கிறது என்கிறார்கள்.
வேந்தன்
அண்ணாமலை நடைபயணத்தை தொடங்கி வைக்கும் அமித்ஷா: பயணத் திட்டத்தின் முழு விபரம்!
பள்ளிகளில் ஸ்மார்ட்போன்கள்: உலகளாவிய தடைக்கு யுனெஸ்கோ பரிந்துரை!