இம்மானுவேல் சேகரனார் போராடிய வழியில் சமூகநீதியை காப்போம் என அவரது நினைவிடத்தில் மலர் மரியாதை செலுத்திய பின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஆங்கிலேயர்களுக்கு எதிராக வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்து கொண்டு சிறைவாசம் சென்ற தியாகி இம்மானுவேல் சேகரன் 66வது நினைவு தினம் இன்று (செப்டம்பர் 11) அனுசரிக்கப்படுகிறது.
அதனையொட்டி, அவரது தியாகத்தையும், சமூக பங்களிப்பையும் போற்றும் வகையில் அவரது பிறந்தநாள் நூற்றாண்டினையொட்டி பரமக்குடியில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் தமிழ்நாடு அரசின் சார்பில் கட்டப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் பரமக்குடிக்கு நேரில் சென்ற விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திமுக மற்றும் தமிழ்நாடு அரசு சார்பில் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
அவருடன் அமைச்சர்கள் மூர்த்தி, ராஜ கண்ணப்பன் மற்றும் ஏராளமான திமுக நிர்வாகிகளும் உடன் சென்று அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “இம்மானுவேல் சேகரனாரின் 66வது நினைவுதினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பாக நானும், அமைச்சர் பெருமக்களும் வீரவணக்கத்தை செலுத்தியுள்ளோம்.
சமீபத்தில் சேகரனாரின் குடும்பத்தின் சார்பில் முதல்வரிடம் கோரிக்கை மனு கொடுத்திருந்தனர். அதனை பரிசீலனை செய்த தமிழ்நாடு அரசு ரூபாய் மூன்று கோடி மதிப்பில் பரமக்குடி நகராட்சி பகுதியில் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைத்துக் கொடுக்கும் என முதல்வர் ஸ்டாலின் இன்று காலை அறிவித்துள்ளார்.
இமானுவேல் சேகரனார் சமூக நீதியை காப்பதற்கு போராடினார். அவரது வழியில் நாம் அனைவரும் போராட வேண்டும்” என்று உதயநிதி பேசினார்.
கிறிஸ்டோபர் ஜெமா
’மறக்குமா நெஞ்சம்’: சிக்கிய சி.எம். கான்வாய்…தாம்பரம் போலீஸ் நடவடிக்கை!
இம்மானுவேல் சேகரனுக்கு மணிமண்டபம்: முதல்வர் அறிவிப்பு!
செந்தில் பாலாஜி ஆதரவாளர்களுக்கு ஜாமின்: உயர்நீதிமன்ற கிளை புது உத்தரவு!