நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்போம் என்று விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை பள்ளிகளில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு சென்னை மாநகராட்சி சார்பில் ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி மாநகராட்சி அலுவலகத்தில் இன்று (ஜூலை 4) நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், விளையாட்டு மேம்பாட்டுதுறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலினிடம் மாமன்னன் திரைப்படம் பற்றி இயக்குநர் ரஞ்சித் விமர்சனம் செய்தது குறித்து கேள்வி எழுப்பிய போது, “யாராக இருந்தாலும் சுய விமர்சனத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். தவறை திருத்தி கொண்டு செயல்படுவதற்கு முதல்வர் ஸ்டாலின் எங்களுக்கு வழிகாட்டுகிறார். தமிழகத்தில் இரண்டு பாக்சிங் அகாடமி திறக்க போகிறோம். அடுத்த ஆண்டு முதலமைச்சர் கோப்பையில் பாக்சிங் போட்டி சேர்க்கப்படும்.
செந்தில் பாலாஜி வழக்கை திமுக சட்டப்படி எதிர்கொள்ளும். மீண்டும் திரைப்படத்தில் நான் நடிக்க வாய்ப்பில்லை” என்றார்.
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதற்கு திட்டமிட்டுள்ளது பற்றி உங்கள் நிலைப்பாடு என்ன என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, “வருக…வருக…விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்போம்” என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
செல்வம்
