‘லவ் டுடே’ வசூலை எட்டிப்பிடித்ததா ‘கலகத் தலைவன்’?

Published On:

| By Kavi

பொருளீட்டுவதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு அதற்காக எத்தகைய அநியாயங்களையும் செய்யும் பன்னாட்டு நிறுவனங்களின் செயல்பாடுகள், அவற்றிற்குத் துணைபோகும் அரசியல்வாதிகள், ஆளும் அரசாங்கங்கள்.

அதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் கொடூர பாதிப்புகள் ஆகியவற்றை திரைமொழியில் சொல்லியிருக்கும் படம் கலகத் தலைவன்.

இப்படத்தில் அரசியல்வாதியும், நடிகருமான உதயநிதி ஸ்டாலினை கதாநாயகனாக இல்லை, கதைநாயகனாக நடிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் மகிழ் திருமேனி.

இக்கால இளம்பெண்களை நினைவூட்டும் நாயகியாக நிதி அகர்வால், இதுவரை தமிழ்த் திரையுலகம் கண்டிராத வில்லன் கதாபாத்திரத்தில் ஆரவ், நாயகனின் நண்பர்களாக கலையரசன், விக்னேஷ், வில்லனின் ஆளாக வரும் அங்கனாராய் என குறைவான கதாபாத்திரங்கள் நடித்திருக்கும் படம் கலகத்தலைவன்.

வலிமையான,அடர்த்தியான கதைக்களம், ஆழமாகச் செல்லும் திரைக்கதை, புதிது புதிதான கதாபாத்திரங்கள், அழகான ஆண் பெண் உறவு ஆகியனவற்றோடு ஜீவா ரவியின் மூலம் இந்தியாவின் வட பகுதியில் உள்ள ஃபரிதாபாத்தில் நடக்கும் ஒரு வியாபார ஒப்பந்தம் தமிழகத்தின் கடைக்கோடி மனிதரை எவ்வளவு பாதிக்கிறது? என்பதை விவரிக்கும் காட்சி ஆகியனவற்றில் இயக்குநரின் சர்வதேச, இந்திய அரசியல், பொருளாதார சிந்தனை வெளிப்படுகிறது.

இன்றைய இந்திய ஒன்றிய ஆட்சியாளர்களின் செயல்களை பொது துறை நிறுவனங்களை கையாளும் நடைமுறையை, மக்களை பற்றி கவலைப்படாமல் கார்ப்பரேட் நிறுவனங்கள் நலனுக்கு வேலை செய்வதை திரைமொழியில் தென் இந்தியாவில் பலம்மிக்க அரசியல் கட்சியின் இளைஞர் அணி தலைவரின் தயாரிப்பில் அவரையே நடிக்க வைத்து சமரசமில்லாமல் கலகத்தலைவன் படத்தை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் மகிழ் திருமேனி.

udhayanidhi stalin kalaga thalaivan collection report

கார்ப்பரேட் அரசியல் பேசிய திரைப்படங்கள் தமிழில் ஏற்கனவே வெளிவந்திருந்தாலும் அவை எல்லாம் கார்ப்பரேட் வில்லன் – மக்கள் நலன் விரும்பும் கதாநாயகன் இருவருக்கும் இடையிலான ஆடுபுலி ஆட்டமாகவே இருந்திருக்கிறது.

கலகத்தலைவன் அப்படி ஒரு ஆடு புலி ஆட்டம் என்றாலும் அரசியல்வாதிகளை, சமகால ஆட்சியாளர்களை தோலுரித்துக்காட்டுகிறார் இயக்குநர் மகிழ் திருமேனி.

படைப்பு ரீதியாக எல்லாத்தரப்பினராலும் பாராட்டப்பட்ட “கலகத் தலைவன்” வணிக ரீதியாகவும், பாக்ஸ் ஆபீஸ் வசூலில் வெற்றிபெற்றதா என்றால் இல்லை என்றுதான் வசூல் தகவல்கள் தெரிவிக்கிறது.

தமிழகத்தில் 348 திரைகளில் வெளியானது கலகத் தலைவன். இது ஒரு அரசியல் படமாக இருக்கும் என்கிற நம்பிக்கையில் திமுக இளைஞரணியினர் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

படத்தின் வெளியீட்டுக்காக தயாரிப்பு நிறுவனம் அச்சடித்த போஸ்டரை காட்டிலும் கலகத்தலைவன் படம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்து திமுக இளைஞரணியினர் தமிழ்நாடு முழுவதும் அச்சடித்து ஒட்டிய போஸ்டரின் எண்ணிக்கை அதிகம்.

ஆனால் அந்த எண்ணிக்கையளவில் திரையரங்குக்கு பார்வையாளர்கள் வரவில்லை என்பது தான் களநிலவரமாக உள்ளது.

லவ் டுடே போன்ற காமம் சார்ந்த, காதல் படங்களின் முதல் நாள் வசூல் அளவை கூட பொதுநல நோக்குடன் எடுக்கப்படும் கலகத்தலைவன் எட்டிப் பிடிக்க முடியவில்லை என்கின்றனர்.

தமிழ்நாட்டில், நவம்பர் 21 ஆம் தேதி நிலவரப்படி, கடந்த மூன்று நாட்களில் 5 கோடி ரூபாயை மொத்த வசூல் செய்திருக்கிறது கலகத்தலைவன்.

இராமானுஜம்

மழைக்கு நடுவே தடுமாறிய நியூசிலாந்து… தொடரை கைப்பற்றிய இந்தியா!

“சைதை சாதிக்கைவிட மோசமாக பேசினார் சூர்யா”: காயத்ரி ரகுராம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share