துணை முதல்வராக பொறுப்பேற்ற பின்பு நான் கையெழுத்திட்ட முதல் கோப்பு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிக்கானது தான் என்று உதயநிதி ஸ்டாலின் இன்று (அக்டோபர் 4) தெரிவித்துள்ளார்.
2024-ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை கடந்த செப்டம்பர் மாதம் 10-ஆம் தேதி சிவகங்கை மாவட்ட விளையாட்டு அரங்கில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த போட்டிகள் அனைத்து மாவட்டங்களிலும் 10.09.2024 முதல் 24.09.2024 வரை நடைபெற்றன. இதில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 11,56,566 நபர்கள் பங்கேற்றனர்.
மாவட்ட மண்டல அளவிலான போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், இதில் வெற்றி பெற்றுள்ள 33,000 நபர்கள் முதலமைச்சர் கோப்பை-2024 மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் நடத்தப்படும் இந்த மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் அக்டோபர் 4ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை சென்னை, கோயம்பத்தூர், திருச்சி, மதுரை ஆகிய 4 நகரங்களில் நடத்தப்படுகின்றன.
மொத்தம் 35 வகையான விளையாட்டுக்கள் நடத்தப்பட உள்ளது. இந்த போட்டியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (அக்டோபர் 4) சென்னை ஐவஹர்லால் நேரு உள் விளையாட்டு அரங்கில் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின்,”இங்கே மாநில அளவிலான போட்டியில் பங்கேற்பதற்காக வருகை தந்துள்ள உங்களை எல்லாம் பார்க்கும் போது உங்களிடமுள்ள அதே உற்சாகம் என்னையும் தொற்றிக் கொள்கிறது. துணை முதலமைச்சர் ஆன பிறகு அந்த பொறுப்பை ஏற்ற பிறகு நான் கையெழுத்திட்ட முதல் கோப்பு இந்த முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிக்கானதுதான்.
இதற்கான நிதியை ரூ.82 கோடியாக உயர்த்துவதற்கான கோப்பில் முதலில் கையெழுத்திட்டேன் என்பதை இங்கே பெருமையோடு நான் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு சிறப்பு இருக்கும். ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொரு மாநிலம் சிறந்து விளங்கும். இந்தியாவிலேயே அத்தனை துறைகளிலும் சிறந்து விளங்குகின்ற மாநிலம் எதுவென்றால் அது நம்முடைய தமிழ்நாடு தான்.
குறிப்பாக தமிழ்நாடு விளையாட்டு துறை செய்கின்ற அந்த சாதனைகள் மகத்தானவை. அதற்கு ஒரு சின்ன உதாரணம் தான் இந்த முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள். இந்த போட்டிக்காக சென்ற ஆண்டு மூன்றரை லட்சத்திற்கும் அதிகமான விளையாட்டு வீரர்கள் பதிவு செய்து போட்டியில் பங்கேற்றார்கள்.
ஆனால் இந்த முறை இந்த ஆண்டு கிட்டத்தட்ட 11 லட்சத்து 56 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து இந்த முதலமைச்சர் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று இருக்கிறார்கள். பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு ஊழியர்கள், மாற்றுத் திறனாளிகள், பொதுமக்கள் என்று எல்லா தரப்பில் இருந்தும் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கிறார்கள்.
இத்தனை லட்சம் பேர் அரசு நடத்துகின்ற விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று இருக்கிறார்கள் என்றால், அந்த விளையாட்டு போட்டியினை நம்முடைய துறை அவ்வளவு சிறப்பாக, வெளிப்படைத்தன்மையுடன் நடத்தி வருகிறது என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
அதனால் தான் இந்த ஆண்டு முதலமைச்சர் ஸ்டாலின் இந்த போட்டிகள் நடத்த ரூ.82 கோடி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டார். அது மட்டுமல்ல, இந்த விளையாட்டு போட்டிக்கான பரிசுத்தொகை மட்டுமே ரூ.37 கோடி என்பதை இங்கே பெருமையோடு நான் சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன்.
இந்தியாவிலேயே இத்தனை கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, வருடா வருடம் ஒரு விளையாட்டு போட்டிகளை நடத்துகின்ற ஒரே மாநிலம் நம்முடைய தமிழ்நாடு மட்டும் தான். குறிப்பாக உங்களுடைய கோரிக்கைகளை ஏற்று இந்த வருடம் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் கைப்பந்து, கேரம், செஸ், வாள்வீச்சு, ஜூடோ, குத்துச்சண்டை கோ-கோ, டிராக், சைக்கிளிங், ஜிம்னாஸ்டிக்ஸ், ஸ்குவாஷ் போன்ற புதிய விளையாட்டுகளையும், இந்தாண்டு சேர்த்து இருக்கிறோம்.
முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க வந்திருக்கக் கூடிய நீங்கள் அத்தனை பேரும், இன்றைக்கு தமிழ்நாட்டுடைய வரலாற்றிலே இணைந்து இருக்கிறீர்கள். விளையாட்டினை நம்பி களம் நமதே என்று புறப்பட்டு வந்துள்ள உங்களுடைய கனவுகள் வெல்ல திமுக அரசு என்றைக்கும் துணை நிற்கும்.
விளையாட்டு வீரர்களுக்கு துணை நிற்கின்ற வகையில் ஏராளமான நடவடிக்கைகளை திமுக அரசு எடுத்து வருகின்றது.
இந்த சாதனை பயணம் எப்பொழுதும் தொய்வின்றி தொடர இங்கே வந்து இருக்கக் கூடிய உங்கள் ஒவ்வொருவருடைய பங்களிப்பும் மிக முக்கியம். நீங்கள் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் மட்டுமல்ல, எதிர்காலத்தில் பல தேசிய, மாநில அளவிலான போட்டிகளிலும் விளையாட போகின்ற எதிர்காலத்தினுடைய, நம்ம நாட்டினுடைய வீரர்கள்” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டிஜிட்டல் திண்ணை: திமுக எம்.எல்.ஏ.க்களின் சொத்து மதிப்பு: ஸ்டாலின் எடுத்த சீக்ரெட் டேட்டா!!
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்… எப்போது தெரியுமா?