டோக்கன் பெற முடியாதவர்களுக்கும் ஒரு வாரத்தில் ரூ.6000 நிவாரண தொகை வழங்கப்படும் என்று விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (டிசம்பர் 17) தெரிவித்துள்ளார்.
மிக்ஜாம் புயல் மழை, வெள்ளத்தால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.6000 நிவாரணத்தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

இதற்கான டோக்கன் வழங்கும் பணிகள் டிசம்பர் 14-ஆம் தேதி துவங்கியது. ரூ.6000 நிவாரணம் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் சென்னை வேளச்சேரியில் இன்று துவக்கி வைத்தார்.
இந்தநிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலினிடம், டோக்கன் பெற முடியாதவர்களுக்கு நிவாரண தொகை வழங்கப்படுமா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், “அனைத்து இடங்களிலும் டோக்கன் கொடுக்கப்பட்டு நிவாரண தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஒரு சில இடங்களில் பெயர் விடுபட்டுள்ளது. அதற்காக மாநகராட்சி சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் முழுமையாக நிவாரண தொகை வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
