udhayanidhi inaugurate chennai book fair minnambalam stall no 345
சென்னை புத்தக கண்காட்சியில் நமது மின்னம்பலம் பத்திரிகையும் கலந்துகொண்டிருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் சென்னையில் புத்தக கண்காட்சி திருவிழா நடைபெறும். இந்த கண்காட்சியில் சென்னை மட்டுமல்லாது வெளி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான மக்கள் வருகை தந்து புத்தகங்கள் வாங்கி செல்வார்கள்.
அந்தவகையில், தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறும் 47-ஆவது புத்தக கண்காட்சியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கண்காட்சியை துவக்கி வைத்த பின்னர் அங்கு அமைக்கப்பட்டுள்ள புத்தக அரங்குகளை உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார்.
முன்னதாக புத்தக கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை 4.30 மணிக்கு துவக்கி வைப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
பின்னர் திறப்பு விழா நேரம் பிற்பகல் 3 மணிக்கு மாற்றப்பட்டு புத்தக கண்காட்சியை உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைப்பார் என்று பபாசி அமைப்பு தெரிவித்திருந்தது.

சென்னை புத்தக கண்காட்சியானது இன்று முதல் ஜனவரி 21-ஆம் தேதி வரை 19 நாட்கள் நடைபெறுகிறது. இந்த கண்காட்சியில் 900 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
நமது மின்னம்பலம் பதிப்பகத்தின் புத்தகங்கள் 5 ஆவது வரிசையில் அமைக்கப்பட்டுள்ள அரங்கு எண் 345-ல் கிடைக்கும். இங்கு மின்னம்பலம் இணைய இதழில் தொடர்கள் மற்றும் கட்டுரைகளாக வெளிவந்த புத்தகங்கள் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
புத்தக கண்காட்சியை பார்வையிட நுழைவு கட்டணமாக ரூ.10 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும், வேலை நாட்களில் மதியம் 2 மணி முதல் இரவு 8. 30 மணி வரையிலும் புத்தக கண்காட்சி நடைபெற உள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
டெல்லியில் ஜூனியர் மல்யுத்த வீரர்கள் போராட்டம்!
பிரதமர் மோடியுடன் என்ன பேசினேன்? – ஓபிஎஸ் பேட்டி!
udhayanidhi inaugurate chennai book fair minnambalam stall no 345
