திமுக அரசை யூட்ரன் திமுக அரசு என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
12 மணி நேர வேலை மசோதா மற்றும் திருமண மண்டபங்களில் மது விற்பனைக்கு அனுமதி என திமுக அரசு கொண்டு வந்த சட்டத் திருத்தத்துக்கும், அரசாணைக்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதன் காரணமாக 12 மணி நேர வேலை மசோதாவை தமிழக அரசு நிறுத்திவைத்துள்ளது. திருமண மண்டபங்களில் மதுவுக்கு அனுமதி அளித்து வெளியிட்ட அரசாணையை திருத்தி வெளியிட்டுள்ளது.
அதில் திருமண மண்டபங்களில் மதுவுக்கு அனுமதியில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் திமுக அரசு விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.
இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி,
“தொழிலாளர் 12 மணி நேர வேலை என்ற மசோதா அறிவித்து பின்னர் நிறுத்தி வைப்பு, திருமண மண்டபங்களில் மதுபானம் வழங்கும் உரிமத்தை அறிவித்து பின்னர் ரத்து, பள்ளி கல்வி துறையில் எல்.கே.ஜி வகுப்பு ரத்து என்ற அறிவிப்பு வெளியிட்டு மீண்டும் அதனை கொண்டு வந்தது,
என எதிலும் நிலையான முடிவு எதுவும் எடுக்கமுடியாத இந்த அரசின் நிதானமற்ற கொள்கைகளால் மக்கள் அவதிக்குள்ளாவது மிகுந்த வேதனைக்குரியது, கடுமையாக கண்டிக்கத்தக்கது.
இந்த நிர்வாக திறனற்ற அரசு, இனிவரும் காலங்களிலாவது, கார்ப்பரேட் நலனை மட்டுமே மனதில் கொள்வதை விடுத்து, மக்கள் நலனை மனதில் நிறுத்தி அவர்களின் வாழ்வியலுக்கு உகந்த கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார். இன்று (ஏப்ரல் 25) வெளியிட்டுள்ள இந்த பதிவில் திமுக யூ ட்ரன் அரசு என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பிரியா
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் தேதி மாற்றம்? : அன்பில் மகேஷ் அறிவிப்பு!
