சென்னை மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான டைடல் பார்க் யு வடிவ மேம்பாலம் இன்று (பிப்ரவரி 25) திறக்கப்பட்டது. U shaped flyover opens at Tidal Park
சென்னை ராஜீவ் காந்தி சாலை மற்றும் ஈசிஆர் சாலையை இணைக்கும் டைடல் பார்க் சிக்னல் சந்திப்பை கடக்க, சாதாரண நேரங்களில் குறைந்தது 10 நிமிடங்களாவது ஆகும்.
அதுவே காலை மாலை பீக் ஹவரில் சுமார் 20 நிமிடங்கள் வரை கூட காத்திருக்க வேண்டி இருக்கும்.
ஈசிஆர் செல்லவும், மத்திய கைலாஷ் சந்திப்புக்கு வரவும், ஓஎம்ஆர் சாலைக்கு செல்லவும் முக்கிய சந்திப்பாக இந்த பகுதி உள்ளது.

எனவே ராஜீவ் காந்தி சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க டைடல் பார்க் மற்றும் இந்திரா நகர் ரயில் நிலையம் அருகே 108 கோடி ரூபாயில் யு டர்ன் மேம்பாலம் அமைக்கப்படும் என்று 2019 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு அறிவித்தது.
இந்த நிலையில் இந்திரா நகர் ரயில் நிலையம் அருகே யு டர்ன் மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது.
அதைத்தொடர்ந்து டைடல் பார்க் அருகில் கட்டப்பட்டு வந்த இரண்டாவது யு டர்ன் மேம்பாலம் இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு, சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

.இந்த பாலம் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டது. 510 மீட்டர் நீளமும் 8.50 மீட்டர் அகலமும் கொண்டது. 12.50 மீட்டர் நீளமுள்ள 16 கண்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேம்பாலத்தின் மைய தூண்கள் 18 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இனி சிக்னலில் நிக்காமல் டைடல் பார்க் பகுதியை கடக்கலாம் என்பதால் வாகன ஓட்டிகள் நிம்மதியடைந்துள்ளனர். U shaped flyover opens at Tidal Park