விமான விபத்து: இரங்கல் தெரிவிக்காத பிரதமர்!

Published On:

| By Balaji

அருணாசலப் பிரதேசத்தில் விமானப்படை விமானம் விழுந்து நொறுங்கியதில் பலியான 13 பேரில் மூன்று பேர் கேரளத்தைச் சேர்ந்தவர்கள். இதனால் அம்மாநிலம் சோகத்தில் மூழ்கியுள்ளது.

இந்திய விமானப்படையைச் சேர்ந்த ஏஎன் 32 ரக விமானமொன்று, கடந்த 3ஆம்தேதியன்று அசாம் மாநிலம் ஜோர்கட் விமானத் தளத்தில் இருந்து புறப்பட்டது. அருணாசலப் பிரதேச மாநிலத்திலுள்ள மெசுகாவுக்குச் சென்ற இவ்விமானம், சுமார் அரை மணி நேரத்தில் ராடார் கண்காணிப்பில் இருந்து காணாமல்போனது.

ADVERTISEMENT

அந்த விமானத்தைத் தேடும் பணியில் ஈடுபட்டது இந்திய விமானப்படை. கடந்த 11ஆம் தேதியன்று அருணாசலப் பிரதேசத்திலுள்ள சியாங் மாவட்டப் பகுதியில் உடைந்த விமானத்தின் பாகங்கள் கிடந்தது கண்டறியப்பட்டது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 12,000 அடி உயரமுள்ள பகுதியில் இருந்ததாலும், மோசமான வானிலையாலும் மீட்புக்குழுவினர் அந்த இடத்துக்குச் செல்வது தாமதமானது. கடந்த 13ஆம் தேதியன்று சம்பவ இடத்துக்குச் சென்ற மீட்புக் குழு, விமானத்தில் பயணித்த 13 பேரும் உயிருடன் இல்லை என்பதை உறுதி செய்தது.

தற்போது விமானத்தின் கருப்புப்பெட்டியும், பலியான வீரர்களில் 7 பேரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன. தொடர்ச்சியாக அப்பகுதியில் மழை பெய்துவருவதால், மீதமுள்ள சடலங்களைத் தேடும் பணியில் இடைவெளி ஏற்பட்டுள்ளது. உள்ளூர் மலையேற்ற வீரர்களின் ஒத்துழைப்புடன் தற்போது சடலங்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

ADVERTISEMENT

இந்த விபத்தில் பலியான 13 பேரில் 3 பேர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். திருச்சூர் மாவட்டர் பெரிங்கண்டூரைச் சேர்ந்த ஹரிஹரன் என்பவரின் மகன் வினோத் இந்த விபத்தில் பலியானார். இவர் தனது குடும்பத்தினருடன் கோவையிலுள்ள சிங்காநல்லூரில் வசித்து வந்தார். கொல்லம் மாவட்டம் அஞ்சால் பகுதியைச் சேர்ந்த அனூப்குமாரும் இதில் உயிரிழந்தார். இவர் தனது மனைவி குழந்தையுடன் ஜோர்கட் விமானப்படை தளம் அருகே வசித்து வந்தார்.

ADVERTISEMENT

கன்னூர் மாவட்டம் அஞ்சரகண்டியைச் சேர்ந்த ஷரின் என்பவரும் இந்த விமானவிபத்தில் பலியானார். மூன்று வீரர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு விரைவில் சொந்த ஊருக்கு அனுப்பப்படும் என்று தெரிவித்துள்ளது இந்திய விமானப்படை.

இந்த விபத்தில் பலியான வீரர்களுக்கு இரங்கல் தெரிவித்து இதுவரை பிரதமர் நரேந்திர மோடி எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. தற்போது அவர் கிர்கிஸ்தான் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதனைச் சில எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

சில மாதங்களுக்கு முன்னர், முப்படைகளைச் சேர்ந்த வீரர்களின் பெருமை பேசிய கட்சிகள் இப்போது மவுனமாக இருக்கின்றன. தேர்தல் நேரத்தில் புல்வாமா தாக்குதலில் இறந்தவர்களுக்காக பேனர் வைத்தவர்கள் இப்போது இந்த விபத்து குறித்து சிறு குறிப்பு கூட வெளியிடவில்லை என்று பாதுகாப்புப் படைகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

**

மேலும் படிக்க

**

**[டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கலைப்பு- ஸ்டாலினை குறிவைக்கும் வருமான வரித்துறை!](https://minnambalam.com/k/2019/06/14/65)**

**[தினகரன் தளபதிக்கு எடப்பாடி தூது: ஜெயக்குமார் எதிர்ப்பு!](https://minnambalam.com/k/2019/06/14/51)**

**[அதிமுக: அந்த 11 பேர் குழுவில் யார் யார்?](https://minnambalam.com/k/2019/06/13/22)**

**[மூடப்படும் அருவிகள்: கேரளத்தில் பண மழை!](https://minnambalam.com/k/2019/06/14/20)**

**[பாக்கியராஜ் அணிக்கு விஜயகாந்த் ஆதரவு!](https://minnambalam.com/k/2019/06/13/44)**


செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share