பக்ரீத்: ஆடு, மாடுகளை பலியிட தடை!

Published On:

| By Balaji

பக்ரீத் பண்டிகையையொட்டி பொது இடங்களில் ஆடு, மாடுகளை பலியிடக் கூடாது என உத்தராகண்ட் உயர் நீதிமன்றமும், உத்தரப் பிரதேச மாநில அரசும் கட்டுப்பாடு விதித்துள்ளது.

பொது இடங்களில் ஆடு, மாடுகளை பலியிடுவது தொடர்பான விவகாரத்தை, நேற்று(ஆகஸ்ட் 21) தானாக முன்வந்து விசாரித்த உத்தராகண்ட் உயர் நீதிமன்ற நீதிபதிகள் ராஜீவ் சர்மா மற்றும் மனோஜ் திவாரி ஆகியோர் அளித்த தீர்ப்பில், “பக்ரீத் பண்டிகையின் போது, பொது வெளியில் ஆடு, மாடுகளை பலியிடுவது தடை செய்யப்படுகிறது. இறைச்சி கூடத்தில் மட்டுமே ஆடு, மாடுகள் பலியிடப்பட வேண்டும், அவற்றின் ரத்தம் நீர்நிலைகளில் கலக்காமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த தீர்ப்பானது இந்துக்களுக்கும் பொருந்தும்” என தீர்ப்பளித்தனர்.

ADVERTISEMENT

அதேபோல், உத்தரப் பிரதேச அரசும் ஆடு, மாடுகளை பலியிடுவது தொடர்பாக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், மாவட்ட ஆட்சியர்களை காணொலி காட்சி மூலம் நேற்று தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், ‘‘பக்ரீத் பண்டிகையையொட்டி ஆடு, மாடுகளை பொது இடங்களில் பலியிடக்கூடாது. பலியிடும் முன்பு ஆடு, மாடுகளுடன் செல்ஃபி எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடும் போக்கு தற்போது அதிகரித்து வருகிறது.

ADVERTISEMENT

இதற்கு அனுமதி அளிக்க முடியாது. விலங்குகளை பலியிடும் காட்சிகளை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடக்கூடாது. பக்ரீத் பண்டிகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும்’’ எனக் கூறியுள்ளார்.

இஸ்லாமியர்களின் புனித நாளான இன்று அவர்கள் ஆடு, மாடுகளை பலி கொடுத்து அவற்றை மூன்றாக பிரித்து, ஒன்றை தம் குடும்பத்திற்கும், இரண்டாம் பகுதியை உறவினர்களுக்கும், மூன்றாவது பகுதியை ஏழைகளுக்கு தானமாக கொடுப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share