கேரள மீனவர்களுக்கு போலீஸ் பதவி!

Published On:

| By Balaji

கேரள பெருமழை வெள்ளத்தின்போது, பாதிக்கப்பட்ட மக்களைக் காப்பாற்ற உதவிய மீனவர்களில் 200 பேருக்கு காவலர் பதவி அளிக்கப்படவுள்ளது.

கடந்த மாதம் 9ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை, கேரள மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கடும் மழை பெய்தது. இதனால், அங்குள்ள 12 மாவட்டங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இடுக்கி, எர்ணாகுளம், பத்தனாம்திட்டா, வயநாடு, பாலக்காடு உள்ளிட்ட பல மாவட்டங்கள் நீரில் மூழ்கின. ராணுவம், கடற்படை, கடலோரக் காவல் படை, தேசியப் பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த வீரர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். இதையும் மீறி, கேரளாவின் பல பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்வதில் சிரமம் தொடர்ந்தது.

ADVERTISEMENT

அப்போது, அம்மாநிலத்தைச் சேர்ந்த மீனவர்கள் பலர், தங்களது சொந்தச் செலவில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். சுமார் 65,000க்கும் அதிகமான மக்களைக் காப்பாற்றினர். இதற்காக, முதலமைச்சர் பினராயி விஜயன் மீனவர்களுக்கு உதவித்தொகை அறிவிக்க முன்வந்தபோது, அவர்கள் அதனை ஏற்க மறுத்துவிட்டனர்.

இந்த நிலையில், மீட்புப் பணிகளில் ஈடுபட்ட மீனவர்களுக்குக் காவலர் பதவிகள் அளிக்கப்படவுள்ளதாக அறிவித்துள்ளார் அம்மாநில நிதியமைச்சர் டாக்டர் தாமஸ் ஐசக். அது மட்டுமல்லாமல், மீன் வளத் துறையின் சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மீனவர்களைக் கொண்டு மீட்புக் குழு அமைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த இரண்டு திட்டங்களும் மாநில அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டுவிட்டதாகவும், தனது ட்விட்டர் பக்கத்தில் தாமஸ் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT

கடந்த 29ஆம் தேதியன்று திருவனந்தபுரத்தில் நடந்த அரசு விழாவொன்றில், மீட்புப் பணியில் ஈடுபட்ட மீனவர்களுக்குச் சான்றிதழ் அளித்துக் கவுரவித்தார் பினராயி விஜயன். அப்போது, தங்களது பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல் பாதிக்கப்பட்ட மக்களை மீனவர்கள் காப்பாற்றியதாகப் புகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share