சேலம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டனர்.
சேலம் கருங்கல்பட்டி பகுதியில் வசித்து வந்தவர் சிவராமன். இவரது மனைவி புஷ்பா. இவர்களுக்கு 42 வயதில் பாபு என்ற மகன் உள்ளார். இந்நிலையில், இன்று காலை நீண்ட நேரமாகியும் வீடு திறக்கப்படவில்லை. அதனால், அக்கம்பக்கத்தினர் கதவை தட்டி பார்த்துள்ளனர். கதவு திறக்கப்படாததால், செவ்வாய்ப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மூவரும் தற்கொலை செய்திருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து, மூன்று பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், சிவராமன் ரூ.5 லட்சத்திற்கும் மேல் அந்தப்பகுதியை சேர்ந்தவர்களுக்கு கடன் கொடுத்துள்ளார். பணம் வாங்கியவர்கள் பணத்தை திருப்பி கொடுக்காமல் இழுத்தடித்துள்ளனர்.
பாபுவுக்கு கண்பார்வை குறைபாட்டால் திருமணம் நடைபெறவில்லை. மகனுக்கு திருமணம் நடக்கவில்லை, கொடுத்த பணத்தை திரும்பி வாங்க முடியவில்லை ஆகிய காரணங்களால் மனமுடைந்த சிவராமன் நேற்றிரவு(ஏப்ரல் 1) குடும்பத்துடன் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரிய வந்துள்ளது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு பூலாவாரி ஆத்துக்காடு பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
