NL@,குன்னூர் தேயிலை வர்த்தகர் கூட்டமைப்பால் நடத்தப்படும் 2018ஆம் ஆண்டுக்கான முதல் ஏலமானது அதிக விற்பனை மற்றும் அதிக வருவாயுடன் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. முந்தைய 8 மாதங்களின் ஏல விலையை விட அதிக விலைக்குத் தேயிலை விற்பனையாகியுள்ளது.
இந்தத் தேயிலை ஏலமானது அதிக விற்பனை மற்றும் அதிக வருவாயுடன் சிறப்பாக நடந்து முடிந்துள்ளதால் விவசாயிகள் மற்றும் வர்த்தகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். வட இந்தியாவில் குளிர் சூழல் நிலவுவதால் தேயிலைத் தோட்டங்கள் மற்றும் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் மலைவாழ் நுகர்வோர் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கான தேவை அதிகரித்து ஏலத்தில் விற்கப்பட்ட நீலகிரி தேயிலையை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டினர். இதனால் விற்பனைக்கு வந்த மொத்த தேயிலையில் 87 சதவிகிதம் கிலோ ஒன்றுக்கு ரூ.88.77 என விற்பனையானது. இது சென்ற ஆண்டை விட 4 ரூபாயும் சென்ற மாதத்தை விட 10 ரூபாயும் அதிகமாகும்.
குளோபல் டீ புரோக்கர்ஸ் நிறுவனத்தால் நடத்தப்பட்ட தேயிலை ஏலத்தில், சிகப்பு தேயிலைத் தூளை, டீ சர்வைசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் கிலோ ஒன்றுக்கு ரூ.274க்கும், ஹோம்டேல் எஸ்டேட்ஸ் நிறுவனம் ரூ.268க்கும், ஜே. தாமஸ் நிறுவனத்தால் நடத்தப்பட்ட சி.டி.சி. வகை தேயிலை ஏலத்தில் ரூ.270 வரையில் விலைபோனது. ஆர்தடாக்ஸ் வகைத் தேயிலை ஏலத்தில் சாம்ராஜ் நிறுவனம் கிலோவுக்கு ரூ.295 கொடுத்து வாங்கிச் சென்றது. ஆர்தடாக்ஸ் தேயிலைத் தூளுக்கான ஏலத்தில் கொடநாடு தேயிலை நிறுவனம் ரூ.276 க்கு வாங்கியது.
