உயர்ந்தது சரக்கு ரயில் கட்டணம்!

Published On:

| By Balaji

கூடுதல் வருவாய் பெறும் நோக்கில் சரக்கு ரயில் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.

வருவாய் உருவாக்கத்தை உறுதி செய்யும் நோக்கில் சரக்கு போக்குவரத்துக்கான கட்டணங்களை இந்திய ரயில்வே துறை திருத்தியமைத்துள்ளது. இந்த முடிவினால் சரக்கு போக்குவரத்துக்கான கட்டணங்கள் 8.75 விழுக்காடு வரையில் உயரும். முக்கியமாக நிலக்கரி, இரும்பு, எஃகு, இரும்புத் தாது, எஃகு ஆலைகளுக்கான மூலப் பொருட்கள் போன்ற சரக்குகளுக்கு ரயில் போக்குவரத்துக் கட்டணம் உயரும். அதோடு கண்டெய்னர்களை ஏற்றிச் செல்வதற்கான கட்டணம் 5 விழுக்காடு உயர்த்தப்பட்டுள்ளது. மற்ற சிறு சரக்குகளுக்கான போக்குவரத்துக் கட்டணம் 8.75 விழுக்காடு உயர்ந்துள்ளது.

ADVERTISEMENT

எனினும், விவசாயிகள் மற்றும் சாமானிய மனிதர்களின் நலனைக் கருத்தில் கொண்டு உணவு தானியங்கள், மாவு, பருப்பு வகைகள், உரம், உப்பு, சர்க்கரை போன்றவற்றுக்கான ரயில் போக்குவரத்துக் கட்டணம் உயர்த்தப்படவில்லை. மேலும், சிமெண்ட், பெட்ரோல், டீசல் ஆகிய பொருட்களுக்கான ரயில் போக்குவரத்துக் கட்டணமும் உயர்த்தப்படவில்லை. இந்தக் கட்டணத் திருத்தங்களால் இந்திய ரயில்வேயின் வருவாய் ரூ.3,344 கோடி கூடுதலாக உயரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கூடுதல் வருவாயைக் கொண்டு ரயில்வே துறையின் பாதுகாப்பு, தரம் மற்றும் இதர சேவைகள் மேம்படுத்தப்படும் என்று ரயில்வே துறை கூறியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share