�
2017ஆம் ஆண்டின் முடிவில் இந்தியாவின் எஃகு உற்பத்தி 36 லட்சம் டன்களைத் தாண்டும் என்று இந்திய எஃகு மேம்பாட்டுக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி இந்திய எஃகு மேம்பாட்டுக் கூட்டமைப்பின் தலைவர் கே.கே.பஹுஜா பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திடம் நவம்பர் 19ஆம் தேதியன்று கூறுகையில், ”2016ஆம் ஆண்டின் முடிவில் (டிசம்பர் வரையில்) இந்தியா 33 லட்சம் டன் அளவிலான எஃகை உள்நாட்டில் உற்பத்தி செய்திருந்தது. இந்த ஆண்டின் முடிவில் எஃகு உற்பத்தி 36 லட்சம் டன்னாக உயரும். இதன் மூலம் இந்தியாவின் எஃகு உற்பத்தி 8 முதல் 9 சதவிகித வளர்ச்சியைப் பதிவு செய்யும். சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எஃகுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் உள்நாட்டு உற்பத்தி உயர்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ளன. மேலும், 2018ஆம் ஆண்டில் இந்தியா 40 லட்சம் டன் அளவிலான எஃகை உற்பத்தி செய்யும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது” என்றார்.
ஆட்டோமொபைல், சாலையமைப்பு, நெடுஞ்சாலை மேம்பாட்டுப் பணிகள், வீடமைப்புத் திட்டம் ஆகிய பிரிவுகள் காணப்படும் அதிக தேவை காரணமாக எஃகு உற்பத்தி அதிகரிக்கப்பட்டு வருகிறது. ஏற்கெனவே எஃகு உற்பத்திக்கு முக்கிய மூலக்கூறாக இருக்கும் நிக்கல் இறக்குமதிக்கான வரியை மத்திய அரசு ரத்து செய்துள்ளதால் எஃகு உற்பத்தி மேம்பட்டுள்ளது. இதனால் எஃகு உற்பத்திக்கான செலவுகளும் குறைந்துள்ளது. சர்வதேச அளவில் எஃகு உற்பத்தியில் சீனாவைத் தொடர்ந்து இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.�,