உலக சாதனை முயற்சியில் கலைஞர் பிறந்தநாள் மாரத்தான்!

Published On:

| By Monisha

two world record in kalaignar marathan

கலைஞர் நூற்றாண்டு மாரத்தானில் 2 உலக சாதனைகளை படைக்க உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை நந்தனம் ஓய்.எம்.சி.ஏ மைதானத்தில் மாரத்தானில் பங்கேற்பவர்களுக்கான உடைகள், அடையாள அட்டைகள் இன்றும் நாளையும் வழங்கப்படுகிறது. இதனை பார்வையிட்ட பின் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், ”ஆரோக்கியமான வலுவான அடுத்த தலைமுறையை உருவாக்கிடும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் கலைஞர் நினைவு மாரத்தான் போட்டிகள் நடத்தப்படுகிறது. பேரிடர் காலத்தில் காணொளி மூலம் 8,541 பேர் கலந்துகொண்ட மாரத்தான் நடைபெற்றது.

பதிவு கட்டணமாக 300 ரூபாய் பெறப்பட்டது. அதன் மூலம் கிடைத்த தொகை 21 லட்சம் ரூபாய் அப்போதைய அதிமுக அரசிடம் பேரிடர் நிதியாக கொடுக்கப்பட்டது. 56 லட்சம் ரூபாய் 2021 ஆம் ஆண்டு பெறப்பட்டு முதல்வரிடம் பேரிடர் நிதியாக கொடுக்கப்பட்டது.

கடந்த ஆண்டு நடைபெற்ற நேரடி மாரத்தானில் 43ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றது தேசிய, ஆசிய அளவில் சாதனை படைத்தது. அப்போது பெறப்பட்ட பதிவுக்கட்டண தொகையும் முதல்வரிடம் கொடுக்கப்பட்டது. அதன் மூலம் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு குழந்தைகளை அழைத்து வரும் பெற்றோர் தங்கும் வகையில் கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் மாரத்தான் நாளை மறுநாள் 6 ஆம் தேதி காலை துவங்குகிறது. இதில் பங்கேற்க 73ஆயிரத்து 206 பேர் பதிவு செய்துள்ளனர். இது கின்னஸ் சாதனை படைக்கவுள்ளது. இதற்காக கின்னஸ் சாதனை அமைப்பின் நிர்வாகிகள் நாளை சென்னைக்கு வரவுள்ளனர்.

21கி மீ ஓடுபவர்கள் 1991 பேர், 10 கி.மீ ஓடுபவர்கள் 6640 பேர், 5 கி.மீ ஓடுபவர்கள் 64611 பேர் , திருநங்கை, திருநம்பிகள் 1063 பேர் ஓடுகிறார்கள் என்பதும் பெரிய சாதனை. 21,514 பெண்கள், 50 ஆயிரம் ஆண்கள் பங்கேற்க உள்ளனர்.

மொத்தம் 10.70 லட்சம் ரூபாய் பரிசுகள் ஒவ்வொரு பிரிவிலும் 3 பேருக்கு வழங்கப்படவுள்ளது. 17இடங்களில் சத்தான உணவு குடி நீர் வழங்கப்படவுள்ளது.
தீவுத்திடலில் மாலை 7.30 மணியளவில் நடைபெறும் நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதல்வர் பரிசுகளை வழங்க உள்ளார்

500-க்கும் மேற்பட்ட காவல்துறை, கடலோர காவல்துறை, ராணுவத்தினர் உள்ளிட்டோர் மாரத்தானில் பங்கேற்கிறார்கள்.

மெட்ரோ ரயிலில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாரத்தானிற்கான உடைகள் வழங்கும் போதே மெட்ரோ பயண அட்டைகள் வழங்கப்படவுள்ளது. இதன் மூலம் அதிகாலை 3.30.முதல் 12.30 மணி வரை பயணிக்கலாம்.

பல்வேறு நாடுகளை சேர்ந்த தூதர்களும் விழாவில் பங்கேற்கிறார்கள். 3 கோடியே 42 லட்சம் ரூபாய் பதிவுக்கட்டணத்தை விழா மேடையில் முதல்வரிடம் வழங்கவுள்ளோம். இதைக் கொண்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் புற்று நோய் சிகிச்சை மையம் அமைக்க கோரிக்கை வைக்கவுள்ளோம்.

அவர் அக்கோரிக்கையை நிச்சயம் நிறைவேற்றுவார் என்று நம்புகிறோம். அப்படியானால் 10 கோடி ரூபாய்க்கும் மேல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் புற்று நோய் சிகிச்சை மையம் அமையவுள்ளது.

ஓடி முடித்தவர்கள் அமரும் இடத்தில் செந்தில் ராஜலெட்சுமி இசை நிகழ்ச்சி, மற்றும் காலை உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 20-க்கும் மேற்பட்ட பாதுகாப்பு வாகனங்கள், 50-க்கும் மேற்பட்ட இயன்முறை மருத்துவர்கள் ஓடி முடித்தவுடன் உதவி தேவை இருப்பின் செய்ய உள்ளனர்.

அப்பல்லோ, மெட் ஆல் உள்ளிட்ட மருத்துவமனைகள் மருத்துவப்பணிகளை செய்ய உள்ளனர். சென்னை மாநகராட்சி சார்பில் சாலைகள் உடனடியாக சுத்தம் செய்யும் வகையில் தூய்மைப்பணியாளர்கள் பணியில் ஈடுபட உள்ளனர்.

குடியரசுத் தலைவர் வரும் நிகழ்ச்சிக்கும் மாரத்தானிற்கும் தொடர்பில்லை. குடியரசுத் தலைவர் வரும் வழியில் மாரத்தான் செல்லவில்லை.

திருநங்கைகள் திருநம்பிகளுக்கு ஊக்கப் பரிசு அளிக்கப்படும் என விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

அந்த வகையில் இந்த மாரத்தானில் பங்கேற்கும் 1,063 திருநங்கை திருநம்பியருக்கு தலா ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்க உள்ளார்” என்று தெரிவித்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

தப்பிப் பிழைத்தது ஓ.பி.ரவீந்திரநாத் எம்பி.பதவி!

சானியா மிர்சா குறித்தான பயோவை நீக்கிய சோயிப் மாலிக்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share