மணிப்பூரைத் தொடர்ந்து மேற்கு வங்கம்…. அரை நிர்வாணமாக இழுத்து செல்லப்பட்ட பெண்கள்!

Published On:

| By christopher

Two women stripped & paraded

மணிப்பூரைத் தொடர்ந்து, மேற்கு வங்காளத்திலும் 2 பெண்கள் தாக்கப்பட்டு, அரை நிர்வாணமாக அழைத்து செல்லப்பட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க மாநிலம் மால்டாவின் பகுவாஹாட்டில் உள்ள உள்ளூர் மக்கள் திருட்டு சந்தேகத்தின் பேரில் இரண்டு பெண்களை பிடித்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.

ADVERTISEMENT

இரண்டு பெண்களை அங்குள்ள பல பெண்கள் தாக்கும் காட்சிகள் சமூகவலை தளங்களில் வெளியாகியுள்ள வீடியோவில் பதிவாகியுள்ளது. எனினும், இந்த சம்பவம் குறித்து மேற்கு வங்க காவல்துறையிடம் புகார் எதுவும் அளிக்கப்படவில்லை.

இதுகுறித்து மேற்கு வங்க போலீசார் தரப்பில்,  “இந்த சம்பவம் 3 முதல் 4 நாட்களுக்கு முன்பு மால்டாவில் உள்ள பகுவாஹாட் பகுதியில் நடந்தது.

ADVERTISEMENT

முதற்கட்ட விசாரணையில், திருட்டில் ஈடுபட்டபோது உள்ளூர் பெண் வியாபாரிகளால் சந்தேகத்தின் பேரில் இரண்டு பெண்களும் கையும் களவுமாக பிடிபட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து அவர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து பிடிபட்ட இரண்டு பெண்களும் தப்பியோடிய நிலையில் யாரும் இதுவரை புகார் தெரிவிக்கவில்லை. எனினும் இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இனக்கலவரத்தால் கடந்த 80 நாட்களுக்கும் மேலாக பாதிக்கப்பட்ட மணிப்பூரில் இரண்டு பழங்குடியின பெண்கள் நிர்வாணமாக அழைத்து செல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆளும் பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நாடு முழுவதும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மேற்கு வங்களாத்தில் நடந்துள்ள இந்த சம்பவத்தை வைத்து, மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அரசை பாஜகவினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

இதுகுறித்து பாஜகவின் ஐ.டி விங் தலைவர் அமித் மால்வியா தனது ட்விட்டர் பக்கத்தில்,

“மால்டாவில் கடந்த 19 அன்று வெறித்தனமான செயலில் ஒரு கும்பல் ஈடுப்பட்டுள்ளது. இது மம்தா பானர்ஜியின் இதயத்தை ‘உடைத்திருக்க’ வேண்டும்.

அவர் வங்காளத்தின் உள்துறை அமைச்சராகவும் இருப்பதால், அவர் கோபப்படுவதற்கு பதிலாக, செயல்பட வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

வைரலாகி வரும் இந்த வீடியோ குறித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, ”பாரதிய ஜனதா கட்சி (பாஜக) இந்த சம்பவத்தை அரசியல் கோணத்தில் பார்க்கிறது?” என்று கேள்வி எழுப்பியுள்ளது.

“இது சம்பவம் நடந்த இடம் ஒரு சந்தை ஆகும். திருட்டில் ஈடுபட்ட இரண்டு பெண்கள் பிடிபட்ட நிலையில் அவர்களை தாக்கியுள்ளனர். அவர்களை அங்குள்ள போலீசார் தடுக்க முயன்றனர்.

பெண்கள் சட்டம் ஒழுங்கை கையில் எடுத்தது தவறு. அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இதை ஏன் பாஜக அரசியல் ஆக்குகிறது என்று கேள்வி எழுப்பியுள்ளது டி.எம்.சி.

கிறிஸ்டோபர் ஜெமா

மணிப்பூர் வீடியோ : பெஸ்ட் காவல்நிலையத்துக்கு அருகில் இந்த கொடுமை!

’நாடாளுமன்ற தேர்தலோடு திமுகவுக்கு எதிர்காலம் இருக்காது’ – செல்லூர் ராஜூ

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share