சென்னையில் ரூ.45.20 லட்சம் கள்ளநோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலையில் செயல்பட்டு வரும் சாலையோர காய்கறி கடையில் முதியவர் ஒருவர் நேற்று (ஆகஸ்ட் 17) ரூ.500 கள்ளநோட்டை கொடுத்து காய்கறி வாங்க முயன்றுள்ளார்.
ரூபாய் நோட்டு வித்தியாசமாக இருப்பதை அறிந்த கடை உரிமையாளர் அதனை கள்ளநோட்டு என்று கண்டுபிடித்துள்ளார்.
தொடர்ந்து அவரை பிடித்து சோதனை செய்ததில் அவரிடம் மேலும் 3 ரூ.500 கள்ளநோட்டுகள் இருந்துள்ளது. இதனையடுத்து உடனே காய்கறி கடைக்காரர், 4 கள்ளநோட்டுகளுடன் முதியவர் ஒருவர் காய்கறி வாங்க வந்துள்ளதாக நுங்கம்பாக்கம் காவல்நிலையத்திற்கு புகார் கொடுத்துள்ளார்.
விரைந்து சென்ற காவல் அதிகாரிகள் முதியவரை விசாரணைக்கு அழைத்து சென்றனர். விசாரணை நடத்தியதில் அவர் பள்ளிக்கரணையை சேர்ந்த 64 வயது முதியவரான முன்னாள் ராணுவ வீரர் அண்ணாமலை என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
முன்னாள் ராணுவ அதிகாரி அண்ணாமலை அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட கொடுத்து அனுப்பிய விருகம்பாக்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் சுப்பிரமணியன் (62) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.
இதனை தொடர்ந்து திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையர் தேஷ்முக் சேகர் சஞ்சய் தலைமையிலான தனிப்படை போலீசார் கைதான சுப்பிரமணியன் வீட்டில் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 90 கட்டு கள்ளநோட்டுகள் அதாவது, ரூ.45.20 லட்சம் கள்ளநோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். போலீசார் பறிமுதல் செய்த ரூ.45.20 லட்சமும் ரூ.500 நோட்டுகள் மட்டுமே.
இந்த விவகாரம் தொடர்பாக துணை காவல் ஆணையர் அளித்த பேட்டியில்,
“கள்ளநோட்டு விவகாரத்தில் நடைபெற்ற புலன் விசாரணையில் சுப்பிரமணியன் தான் முக்கிய குற்றவாளி என்று தெரிய வருகிறது.
ஒரு பிரிண்டிங் பிரஸில் கொடுத்து 5 மாதங்களுக்கு முன்பே ரூ.50 லட்சம் கள்ளநோட்டுகளை அடித்து வாங்கி வைத்துள்ளார்.
இவ்வளவு நாள் கள்ளநோட்டுகளைப் பயன்படுத்தி பொருட்களையும் வாங்கியுள்ளார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
பொதுமக்கள் அனைவரும் உங்களிடம் வரும் நோட்டுகள் அனைத்தும் நல்ல நோட்டுகளா? கள்ள நோட்டுகளா? என்று சரிபார்த்து வாங்க வேண்டும்.
ரூபாய் நோட்டில் ஏதாவது சந்தேகம் இருந்தால் வங்கியில் சரிபார்த்துக் கொள்ளலாம். அப்படி இல்லையென்றால் காவல் துறைக்கு தகவல் கொடுங்கள்” என்று தெரிவித்தார்.
மோனிஷா
“3டி தபால் நிலையம் இந்தியாவின் அடையாளம்” – மோடி