திருச்சியில் பிரச்சாரத்துக்கு வந்தபோது விஜய் திடீரென வாகனத்தில் இருந்து இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனித்துப் போட்டியிடுகிறது.
விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.
இதற்காக இன்று(ஏப்ரல் 2) திருச்சி பாலக்கரையில் உள்ள மாநகராட்சி அலுவலகத்திற்கு வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார் விஜய்.
அப்போது அவரது பிரச்சார வாகனத்திற்கு முன்பும் பின்பும் ஏராளமான கட்சி தொண்டர்களும் விஜய்யின் ரசிகர்களும் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர்.
பெண்களும் குழந்தைகளோடு வந்திருந்தனர். இந்த நிலையில் விஜய் சாலை பேரணியாக வந்து கொண்டிருந்தபோது அவரை பின்தொடர்ந்து ஸ்கூட்டியில் வந்த ஒரு இளைஞரும் பெண்ணும் தவறி கீழே விழுந்தனர்.
இதைப் பார்த்த விஜய் உடனடியாக வாகனத்தில் இருந்து கீழே இறங்கினார். அங்கு விழுந்து கிடந்த இளைஞர், பெண்ணின் அருகே சென்ற விஜய் நலம் விசாரித்தார்.
பின்னர் காயம் அடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.இதனால் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து வாகனத்தில் ஏறி மீண்டும் சாலை வலம் வந்த விஜய் 12 மணிக்கு மேல் மாநகராட்சி அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்.
முன்னதாக தஞ்சாவூர் மாவட்டத்தில் நடந்த பரப்புரைக்கு விஜய் சென்றபோது அவரை பின்தொடர்ந்து வந்த கல்லூரி மாணவர் விக்னேஷ் விபத்தில் சிக்கி படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி கடந்த மார்ச் 23ஆம் தேதி உயிரிழந்தார்.
விஜயின் வாகனத்தை பின்தொடர வேண்டாம் என்று தவெக சார்பிலும், காவல்துறையினரும் அறிவுறுத்தி வந்தாலும், விஜய் ரசிகர்கள் இதை கேட்பதில்லை. இதனாலேயே விபத்தில் சிக்கி காயம் அடைவதும் உயிரிழப்பதும் தொடர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
