நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்பமனுவை சமர்ப்பிக்க வரும் 20ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இன்று (பிப்ரவரி 14) வெளியிட்டுள்ள அறிக்கையில், “வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் வேட்பாளராகப் போட்டியிட விரும்பும் கழகத் தோழர்கள் தங்களுக்கான விருப்ப மனுவைப் பெறுவதற்கும் அதனைச் சமர்ப்பிப்பதற்குமான கடைசித் தேதி இன்று (14.02.2026) என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கழகத்தின் பல்வேறு நிகழ்ச்சிகள் காரணமாக, வழங்கப்பட்ட கால அவகாசத்திற்குள் பெரும்பாலானவர்களால் விருப்ப மனுவைச் சமர்ப்பிக்க முடியாமல் போனதாகத் தெரிவித்து வருகின்றனர். எனவே விருப்ப மனுவைப் பூர்த்தி செய்து அளிப்பதற்கான கால அவகாசம் வரும் 20ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. தங்களது விருப்ப மனுவைத் தலைமை நிலையச் செயலகத்தில் சமர்ப்பிக்கலாம். விருப்ப மனுக்களைச் சமர்ப்பிக்க அதுவே கடைசி நாள் ஆகும். கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலின் பேரில் இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
