தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக்கொடியில் இருக்கும் யானை சின்னத்தை அகற்றக் கோரி அக்கட்சி தலைவர் விஜய்க்கு தமிழக பகுஜன் சமாஜ் கட்சி வழக்கறிஞர் பிரிவின் துணை தலைவர் நேற்று(அக்டோபர் 18) நோட்டீஸ் அனுபியுள்ளார்.
நடிகரும் தவெக கட்சித் தலைவருமான விஜய் அக்கட்சியின் கொடியையும், கட்சிப் பாடலையும் கடந்த ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதி நிர்வாகிகள் மத்தியில் அறிமுகம் செய்து வைத்தார். அக்கொடியில் இரண்டு போர் யானைகள் இடம்பெற்றிருந்தன.
அன்றைய தினமே, பகுஜன் சமாஜ் கட்சி தவெக கொடியில் இருக்கும் யானை சின்னத்தை நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தது. இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்திடமும் மனு அளித்திருந்தது.
இதற்கு தேர்தல் ஆணையம், “கட்சிக் கொடிகள் மற்றும் அதில் இடம்பெறும் சின்னங்கள், உருவங்களுக்கு ஆணையம் எப்போதும் ஒப்புதலோ, அங்கீகாரமோ வழங்குவதில்லை. தேர்தலின் போது ஒரு கட்சியின் வாக்கு சின்னத்தை மட்டுமே தேர்தல் ஆணையம் முடிவு செய்யும்” என்று தேர்தல் ஆணையம் பதிலளித்திருந்தது.
இந்த நிலையில் பகுஜன் சமாஜ் கட்சி வழக்கறிஞர் பிரிவின் துணை தலைவரும் வழக்கறிஞருமான சந்தீப், விஜய்க்கு நேற்று வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அதில் “இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னமான யானை சின்னத்தை தமிழக வெற்றி கழக (TVK) கொடியில் இருந்து நீக்க வேண்டுமென கட்சி கொடி வெளியிட்ட நாளிலிருந்து வலியுறுத்தி வருகிறோம், தேர்தல் ஆணையத்தால் வரையறுக்கபட்ட Central Government Extraordinary Government Gazette Part II, Section 3, Sub-Section (iii) PROVISIONS OF THE EMBLEMS AND NAMES (PREVENTION OF IMPROPER USE) ACT, 1950 , Section 3 விதியின்படியும் இந்திய அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட அரசு ஆணையின்படியும் (Government Gazette of India),
“ஒரு கட்சி, தங்களுக்கென ஒரு கொடி இருந்தால் அந்த கட்சி கொடியில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு வழங்கப்பட்ட சின்னத்தை போன்றோ, மற்ற கட்சிகளின் சின்னத்தை போலவோ அல்லது சின்னத்தின் மாற்றுரு போன்றோ தங்கள் கொடியில் சின்னங்கள் அமையாமல் கவனித்து கொள்ள வேண்டியது அக்கட்சியின் தார்மீக பொறுப்பாகும்” என்ற விதியை மீறுவதாக உள்ளது.
மேலும், பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சேபம் தெரிவித்த நிலையில் இன்றுவரை எந்தவிதமான நடவடிக்கை இல்லாத காரணத்தினால் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு வழக்கறிஞர் அணி – மாநில துணை தலைவர் சந்தீப்பின் அறிவிப்பை இனைத்துள்ளோம். இதனையே சட்ட முறையான அறிவிப்பாக கருதி யானை சின்னத்தை நீக்க வேண்டும் என அறிவுறுத்துகின்றோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அக்டோபர் 27ஆம் தேதி விக்கிரவாண்டி வி.சாலை பகுதியில் நடக்கவிருக்கும் தவெக மாநாடு ஏற்கனவே தொடர்ச்சியாக சிக்கல்கள் வந்துக்கொண்டிருக்கும் நிலையில், தற்போது இந்த நோட்டீஸ் விஜய் கட்சிக்கு மேலும் ஒரு சிக்கலை உண்டாக்குமோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
திருவண்ணாமலையில் கிரிவலம் சென்றேனா? – தமிழிசைக்கு உதயநிதி பதில்!
என் மகனே மீண்டும் பிறந்திருக்கிறான் – தர்ஷனால் கொல்லப்பட்ட ரேணுகாசாமி தந்தை உருக்கம்!
‘திராவிட நல் திருநாடு’: கவனச் சிதறலும் கவனமிகு தொடர்ச்சியும்!