ADVERTISEMENT

மணல் கொள்ளையை எதிர்த்த விஏஓ படுகொலை : 4 தனிப்படைகள் அமைப்பு!

Published On:

| By Monisha

tuticorin VAO murder

தூத்துக்குடியில் கிராம நிர்வாக அலுவலர் பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகேயுள்ள சூசை பாண்டியாபுரத்தைச் சேர்ந்தவர் லூர்து பிரான்சிஸ் (53). இவர் ஸ்ரீவைகுண்டம் வட்டம் முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வந்தார்.

ADVERTISEMENT

பட்டப்பகலில் படுகொலை

நேற்று (ஏப்ரல் 25) வழக்கம் போல் காலை அலுவலகத்திற்குச் சென்று பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது மதியம் 12.30 மணியளவில் லூர்து பிரான்சிஸ் அலுவலகத்திற்குள் நுழைந்த 2 அடையாளம் தெரியாத நபர்கள், மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து லூர்து பிரான்சிஸை சரமாரியாக வெட்டினர். லூர்து பிரான்சிஸ் தப்பிக்க முயற்சித்தும் அவர்கள் சுற்றி வளைத்து வெட்டிவிட்டுத் தப்பி ஓடி விட்டனர்.

ADVERTISEMENT

இதில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து லூர்து பிரான்சிஸ் சரிந்து கீழே விழுந்தார். இந்த சம்பவத்தை பார்த்த அக்கம் பக்கத்தினர் முறப்பநாடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ரத்த வெள்ளத்தில் இருந்த அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர்.

ADVERTISEMENT

ஆனால் சிகிச்சை பலனின்றி லூர்து பிரான்சிஸ் பிற்பகல் 2.40 மணியளவில் உயிரிழந்தார். அவரது உடலுக்கு மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்தார்.

tuticorin VAO murder

கடுமையான தண்டனை

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர், “கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் துணிச்சலும், நேர்மையும் கொண்ட அரசு அலுவலர். நேர்மையான அலுவலர் தற்போது கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் தொடர்புடையவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். மணல் திருட்டு தொடர்பாக அவர் காவல் துறையில் புகார் அளித்ததால் கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக விரிவாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.

திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், சாத்தூர் ராமச்சந்திரன், கனிமொழி எம்.பி. உள்ளிட்டோர் உயிரிழந்த விஏஓவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

முன்விரோதத்தால் கொலை

“முறப்பநாடு பகுதியில் மணல் கடத்தல் நடைபெற்று வருவதாக லூர்து பிரான்சிஸ் போலீசிஸில் ஏற்கனவே புகார் அளித்திருந்தார். ஆனால் அந்த புகாரின் மீது காவல் துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வந்தனர்.

சில நாட்களுக்கு முன்பு அவர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது கலியாவூரை சேர்ந்த ராமசுப்பு மற்றும் மேலும் சிலர் தாமிரபரணி ஆற்றில் மணல் கடத்தலில் ஈடுபட்டுள்ளனர். இதனை தடுத்த லூர்து பிரான்சிஸுக்கு அவர்கள் கொலை மிரட்டல் விடுத்தனர். இதனால் லூர்து பிரான்சிஸ் கடந்த 13 ஆம் தேதி காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தார்.

இந்த முன்விரோதத்தால் ராமசுப்பு மற்றும் அவரது உறவினர் மாரிமுத்து இருவரும் இணைந்து வெட்டிக் கொன்றுள்ளனர்” என்று லூர்து பிரான்சிஸின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒருவர் கைது

இவ்வழக்கில் கலியாவூரை சேர்ந்த ராமசுப்பு கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது ஏற்கனவே மணல் கடத்தல் உள்ளிட்ட 12 வழக்குகள் உள்ளன. இதில் முறப்பநாடு காவல் நிலையத்தில் 8 வழக்குகளும், தூத்துக்குடியில் 1 வழக்கும், நெல்லை மாவட்டம் தாழையூத்து காவல் நிலையத்தில் 1 வழக்கும், சிவந்திப்பட்டி காவல் நிலையத்தில் 2 வழக்குகளும் உள்ளன.

இது குறித்து தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் கூறுகையில், “விஏஓ லூர்து பிரான்சிஸ் கொலை வழக்கில் ராமசுப்பு கைது செய்யப்பட்டுள்ளார். மற்றொரு நபரான மாரிமுத்துவை தேடி வருகிறோம். விரைவில் அவர் கைது செய்யப்படுவார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் மணல் கடத்தல் சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

பணியில் இருந்த விஏஓ பட்டப்பகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தூத்துக்குடி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே முறப்பநாடு, வல்லநாடு, கலியாவூர், அகரம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

முதலமைச்சர் நிவாரணம்

tuticorin VAO murder

லூர்து பிரான்சிஸ் குடும்பத்திற்கு நிவாரண நிதியாக 1 கோடி ரூயாப் முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கவும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்கவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தனிப்படை அமைப்பு

பட்டப்பகலில் விஏஓ வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியை கைது செய்ய தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் திருத்தணி, திருவள்ளூர், மதுரை உள்ளிட்ட பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

tuticorin VAO murder

கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பணிபாதுகாப்பு வழங்க வேண்டும், லூர்து பிரான்சிஸை கொலை செய்தவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் ஈடுபட்டனர்.

மோனிஷா

30 கதாபாத்திரங்கள் கொண்ட ‘செவ்வாய்கிழமை’

கொடநாடு கொலை வழக்கு : சசிகலாவிடம் விசாரணை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share