குழந்தையை கொடூரமாக தாக்கிய தாய்க்கு மனநல பாதிப்பு இல்லை!

Published On:

| By Balaji

செஞ்சி அருகே இரண்டு வயது குழந்தையை கொடூரமாக தாக்கிய தாய் துளசிக்கு மனநலத்தில் எந்தவித பாதிப்பும் இல்லை என்பது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள மணலப்பாடி ஊராட்சிக்குட்பட்ட மோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் வடிவழகன்(37). இவருக்கும், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் ராம்பள்ளியை சேர்ந்த துளசி(22) என்பவருக்கும் கடந்த 2016ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு கோகுல்(4), பிரதீப்(2) என்ற இரு மகன்கள் உள்ளனர்.

ADVERTISEMENT

இந்நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், துளசி தன்னுடைய குழந்தை மீதும் வெறுப்பை காட்டி வந்துள்ளார். இதையடுத்து, துளசி மட்டும் ஆந்திராவில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். குழந்தைகள் அவரது தந்தையுடன் இருக்கின்றனர்.

துளசியின் செல்போன் அவரது கணவரிடம் இருந்துள்ளது. அதில் உள்ள வீடியோக்களை பார்த்து வடிவழகன் அதிர்ச்சியடைந்துள்ளார். வீடியோவில் துளசி தனது 2 வயது மகனான பிரதீப்பை கீழே படுக்க வைத்து கை, கால், வாய் போன்ற பகுதிகளில் கொடூரமாக தாக்கும் காட்சிகள் பதிவாகி இருந்தன.

ADVERTISEMENT

இந்த வீடியோ வடிவழகன் உறவினர்கள் மூலம் சமூக வலைதளங்களில் வைரலானது. பலரும் துளசிக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வந்தனர். இதையடுத்து, வடிவழகன் போலீஸில் அளித்த புகாரின் பேரில் சத்தியமங்கலம் போலீஸார் துளசி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துனர். தொடர்ந்து, இன்று(ஆகஸ்ட் 30) காலையில் துளசி கைது செய்யப்பட்டு, சென்னைக்கு அழைத்துவரப்பட்டார்.

இதுகுறித்து போலீசார் துளசியிடம் விசாரணை நடத்தினர். சென்னையைச் சேர்ந்த பிரேம்குமார் என்பவரை காதலிப்பதாகவும், அதனால் கணவன் மீதுள்ள வெறுப்பை குழந்தை மீது காட்டியதாகவும் துளசி வாக்குமூலம் அளித்துள்ளார். தற்போது போலீசார் பிரேம்குமாரை தேடி வருகின்றனர்.

ADVERTISEMENT

ஒருவேளை மனநலம் பாதிக்கப்பட்டு குழந்தையை தாக்கி இருக்கலாம் என்ற சந்தேகத்தில் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் துளசிக்கு மனநல பரிசோதனை நடந்தது. அதில் அவருக்கு எந்தவித மனநல பாதிப்பும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, துளசியின் மனநலத்தில் எந்த பாதிப்பும் இல்லை என்று மருத்துவர் பாரதி சான்றிதழ் வழங்கினார்.

குழந்தைகள் மீதான வன்முறை தொடர்பான வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட வேண்டாம். குழந்தையை தாக்கும் வீடியோ பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் அதை பரப்பாதீர்கள் என குழந்தைகள் நல செயற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

**-வினிதா**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share