டிடிவி தினகரன் திவாலானவர் என்று அறிவிக்க அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்து வருவதாக அவரது தரப்பு கூறியதை அடுத்து, வழக்கை முடித்து வைத்து உயர்நீதிமன்றம் இன்று (ஆகஸ்ட் 11) உத்தரவிட்டுள்ளது.
சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்தவர் எஸ். பார்த்திபன். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்தார்.
அதில், ”கடந்த 1998-ம் ஆண்டு பிப்ரவரி 6-ந்தேதி அ.ம.மு.க தலைவர் டி.டி.வி.தினகரன் அன்னிய செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக கூறி, அவருக்கு ரூ.31 கோடி அபராதம் விதித்து அமலாக்கத்துறை இயக்குனர் உத்தரவிட்டார். ஆனாலும், அபராத தொகையை இதுவரை அவர் செலுத்தவில்லை.
எனவே, டி.டி.வி. தினகரனிடம் அபராதத் தொகை ரூ.31 கோடியை வசூலிக்கும் விதமாக நடவடிக்கை எடுக்க அமலாக்கத்துறை இயக்குனருக்கு உத்தரவிட வேண்டும்.” என்று தனது மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வி. கங்கா புர்வாலா, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது டி.டி.வி.தினகரன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.குமார், “டி.டி.வி. தினகரனிடம் இருந்து அபராதத்தை வசூலிக்க அமலாக்கத்துறை இயக்குனர் நடவடிக்கை எடுத்தார். இதை எதிர்த்து டி.டி.வி.தினகரன் சிவில் வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
அதேபோன்று, டி.டி.வி.தினகரனை திவாலானவர் என்று அறிவிக்க அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது” என்று கூறினார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மூத்த வழக்கறிஞரின் விளக்கம் மனுதாரருக்கு பதிலாக கிடைத்துவிட்டதால், அதை பதிவு செய்து வழக்கை முடித்து வைக்கிறோம் என்று உத்தரவிட்டுள்ளனர்.
கிறிஸ்டோபர் ஜெமா
நாங்குநேரி சம்பவம்… வன்கொடுமைப் பகுதியாக அறிவியுங்கள்: திருமாவளவன்
அதிகரித்த கடன்… விமர்சித்த நிர்மலா சீதாராமன்: பிடிஆர் கண்டனம்!