ஓ.பன்னீர்செல்வத்துடன் சேர்ந்து வரும் நாடாளுமன்ற தேர்தலை சந்திப்போம் என அமமுக பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று (ஜூலை 27) சாமி தரிசனம் மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், “வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஓ.பன்னீர்செல்வத்துடன் சேர்ந்து தான் தேர்தலை சந்திப்போம். இனி வரும் காலங்களில் அனைத்து நிகழ்வுகளிலும் சேர்ந்து தான் பயணிப்போம். தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக இல்லை. நாடாளுமன்றத் தேர்தலில் அமமுக-வின் நிலைப்பாடு குறித்து டிசம்பர் மாதத்தில் அறிவிப்பு வெளியாகும்” என்று தெரிவித்தார்.
சமீபகாலமாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறார். கடந்த மே மாதம் ஓ.பன்னீர் செல்வம் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார்.
இந்த சந்திப்பிற்கு பிறகு இருவரும் இணைந்து செயல்பட போவதாக கூட்டாக செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். இந்தநிலையில் ஆகஸ்ட் 1-ஆம் தேதி கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி ஓபிஎஸ் தரப்பினர் நடத்தும் போராட்டத்திலும் அமமுக கலந்து கொள்ளும் என்று டிடிவி தினகரன் அறிவித்திருந்தார். இந்தநிலையில் நாடாளுமன்ற தேர்தலிலும் இருவரும் இணைந்து தேர்தலை சந்திக்க போவதாக டிடிவி தினகரன் கூறியிருப்பது அரசியல் அரங்கில் முக்கியமான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
செல்வம்
‘நீட்’டால் எம்பிபிஎஸ் படிக்க முடியவில்லை’: மாணவனுக்கு உறுதியளித்த முதல்வர்!
