சி.வி.சண்முகம் மீது தினகரனுக்குத் திடீர் அக்கறை!

Published On:

| By Balaji

சட்ட அமைச்சரே வீட்டை வீட்டு வெளியே வர முடியாத அளவுக்குச் சட்டம் ஒழுங்கு பாதிப்பு இருப்பதாக டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

அமமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று (பிப்ரவரி 17) திண்டிவனத்திலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

ADVERTISEMENT

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், “பொதுச் சொத்துகளை சேதப்படுத்தியதால்தான் தடியடி நடத்தப்பட்டதாக முதல்வர் கூறுவது கண்டிக்கத்தக்கது. வழக்கம்போல எடப்பாடி பழனிசாமி பொய் சொல்கிறார். வண்ணாரப்பேட்டை போராட்டத்தை அரசு சரியாகக் கையாளவில்லை. சிஏஏ விவகாரத்தில் நாங்கள் அரசியல் செய்யவில்லை. மக்களுக்கு ஆதரவாக இருக்கிறோம். தேவைப்பட்டால் சிஏஏவை எதிர்த்து அமமுக நேரடியாகக் களத்தில் இறங்கிப் போராடத் தயங்காது” என்று தெரிவித்தார்.

மேலும், “தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக இருக்கிறது என முதல்வர் சொல்கிறார். ஆனால், விழுப்புரத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் தான் வீட்டை வீட்டுச் செல்ல முடியவில்லை என்றும், அந்த அளவுக்குச் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டிருப்பதாகவும் கூறியிருக்கிறார். அதாவது சட்ட அமைச்சரே வீட்டிலிருந்து வெளியே செல்ல பயமாக இருக்கிறது என்று கூறுகிறார். ஏனெனில், கடந்த இரு மாதங்களில் விழுப்புரத்தில் பல கொலைகள் நடந்துள்ளன. ஆகவே சட்ட அமைச்சரின் கேள்விக்கு முதல்வர் பதில் சொல்ல வேண்டும்” என்றும் வலியுறுத்தியுள்ளார்.

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காவல் துறையினர் செயல்பாடுகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் கடந்த வாரம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், “விழுப்புரத்தில் பட்டப் பகலில் நடந்த கொலை சம்பவத்தால் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். என் வீட்டுக்குச் செல்லவே எனக்கு அச்சமாக இருக்கிறது” எனக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share