இந்திய பொருட்கள் மீது அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த 50% வரியால் தமிழ்நாட்டின் பின்னலாடை ஏற்றுமதி உள்ளிட்ட ஜவுளி துறை மட்டுமல்ல கடல் உணவு ஏற்றுமதியும் மிக மோசமாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையின அட்டூழியத்தால் கடும் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர். மீன்பிடி தொழிலின் எதிர்காலமே கேள்விக்குறியாகி வருகிறது.
இந்த சூழலில், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் 50% வரி விதிப்பை நடைமுறைப்படுத்தி உள்ளார். இதனால் ஜவுளித் துறை, தோல் தொழில் துறை உள்ளிட்டவைகள் மிக மோசமான பாதிப்பை எதிர்கொண்டுள்ளன.
பல்லாயிரக்கணக்கான சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூடப்படும் அபாயமும் பல லட்சம் தொழிலாளர்கள் வேலையை இழக்கும் சூழ்நிலையும் உருவாகி உள்ளது.
இதேபோல நாட்டின் கடல் உணவு ஏற்றுமதியும் பாதிப்பை எதிர்கொண்டிருக்கிறது. 2023-24ம் ஆண்டு அமெரிக்காவுக்கு மட்டும் ரூ20,000 கோடி மதிப்பில் சுமார் 3 லட்சம் டன் கடல் உணவுகள் ஏற்றுமதி செய்யப்பட்டன. பதப்படுத்தப்பட்ட இறால், நண்டு,மீன் உள்ளிட்டவை ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. சீனா, ஜப்பான் நாடுகளைவிட அமெரிக்காவுக்குதான் அதிக அளவில் பதப்படுத்தப்பட்ட இறால்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. தற்போது டொனால்ட் டிரம்ப் 50% வரி விதித்துள்ளதால் இந்த துறை மிக மோசமான வீழ்ச்சியை எதிர்கொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு மாதந்தோறும் 20 கண்டெய்னர்களில் கடல் உணவுகளை 25-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஏற்றுமதி செய்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை தூத்துக்குடி மாவட்டத்தில்தான் செயல்படுகின்றன.
தற்போதைய டிரம்ப்பின் 50% வரி விதிப்பால், தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் கடல் உணவு ஏற்றுமதி நிறுவனங்கள் நெருக்கடிக்குள்ளாகி இருக்கின்றன; அவற்றில் பணிபுரியும் பணியாளர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகிவிட்டது. ஆகையால் மத்திய அரசு விரைவாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் கடல் உணவு ஏற்றுமதியாளர்கள்.
