மீண்டும் மத்திய அரசிடமே அதிகாரம்: டெல்லி மசோதாவுக்கு திருச்சி சிவா எதிர்ப்பு!

Published On:

| By Monisha

trichy siva condemns delhi ordiance bill

டெல்லி அவசர சட்ட மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. டெல்லி நிர்வாகத்தில் இருக்கும் அதிகாரிகளின் நியமனம், மாறுதல்கள் தொடர்பான அதிகார போட்டி டெல்லி அரசுக்கும் மத்திய அரசுக்கும் நடைபெற்று வந்தது.

இந்த விவகாரத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்குத்தான் அதிகாரிகளை நியமிப்பது, இடமாற்றம் செய்தல் உள்ளிட்ட அதிகாரங்கள் இருப்பதாகத் தீர்ப்பளித்தது உச்சநீதிமன்றம்.

இருப்பினும் டெல்லியில் குரூப் ஏ அதிகாரிகளை மாற்றும் அதிகாரம் கொண்ட தேசிய தலைநகர் சிவில் சர்வீஸ் ஆணையத்தை உருவாக்குவதற்கான அவசர சட்டத்தை கொண்டு வருவதற்கான மசோதாவை கொண்டு வந்தது.

இதனை நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அரசு சட்டமாக கொண்டு வரும் என்பதால் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் எதிர்கட்சிகளை சந்தித்து ஆதரவு திரட்டி வந்தார்.

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி மக்களவையில் அவசரச் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை தாக்கல் செய்த உள்துறை அமைச்சர் அமித்ஷா ”நேரு, பட்டேல், அம்பேத்கர், ராஜாஜி உள்ளிட்டோரே டெல்லிக்கு மாநில அந்தஸ்து கொடுக்க விரும்பவில்லை. டெல்லிக்கான சட்டங்களை நாடாளுமன்றத்தில் இயற்ற அரசமைப்பு அனுமதிக்கிறது” என்று பேசியிருந்தார்.

இந்த மசோதா டெல்லி அரசின் உரிமைகளை அப்பட்டமாக மீறுவதாக உள்ளது, உச்சநீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்யவே இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், “இது டெல்லி மக்களை அடிமைப்படுத்தும் மசோதா. டெல்லி மக்களை ஆதரவற்றவர்களாக்கும் மசோதா. இந்த மசோதாவை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது” என்று அமித்ஷாவிற்கு பதிலளித்திருந்தார்.

தொடர்ந்து இந்த மசோதா இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. எதிர்கட்சிகளின் கடும் அமளிக்கு மத்தியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் மசோதாவை தாக்கல் செய்தார்.

பின்னர் இந்த மசோதா மீதான விவாதம் நடைபெற்றது. இந்த மசோதா ஜனநாயகத்திற்கும் அரசியலமைப்பிற்கும் எதிரானது என்று காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தது.

அப்போது பேசிய திமுக மாநிலங்களவை எம்.பி. திருச்சி சிவா, “உச்சநீதிமன்ற உத்தரவை மீறும் வகையில் டெல்லி அவசரச் சட்ட மசோதா உள்ளது. மாநிலத்திற்கு முழு அந்தஸ்து வழங்குவோம் என்று கூறியிருந்த நிலையில், தற்போது டெல்லி அவசரச் சட்ட மசோதாவை கொண்டு வர வேண்டிய அவசியம் என்ன?.

இது ஜனநாயகத்திற்கு விரோதமானது மட்டுமின்றி, அரசியல் சாசனத்திற்கும், கூட்டாட்சி தத்துவத்திற்கும் எதிரானது. மாநில அரசுகள் எதிர்க்கட்சிகளால் ஆளப்படும் போது, ஆளுநர்களால் இடையூறு செய்யப்படுகின்றன. யூனியன் பிரதேசமாக இருந்தால், துணைநிலை ஆளுநர்கள் மாநில அரசை செயல்பட விடுவதில்லை.

அதிகாரங்கள் அனைத்தும் மீண்டும் மீண்டும் மத்திய அரசிடமே குவிக்கப்படுகிறது. கடைசி குடிசையில் தீ எரிந்தால் முதல் குடிசையில் இருப்பவனும் ஓடிச் சென்று அதை அணைக்க முயற்சிப்பான். அதை செய்யவில்லை என்றால் தன் குடிசையும் எரியும் என அவனுக்கு தெரியும்.

டெல்லி அரசின் அதிகாரத்தை பறிக்கும் மசோதாவை ஆதரிக்கும் பிற கட்சி எம்.பி.க்களுக்கு நான் இதையே கூறிக்கொள்கிறேன்” என்று எதிர்ப்பு தெரிவித்தார்.

 

மோனிஷா

HACT2023: ஜப்பானை சரித்து… இந்தியாவை தாண்டி… மலேசியா முதலிடம்!

மணிப்பூர் விவகாரம்: மூன்று ஓய்வுபெற்ற நீதிபதிகள் அடங்கிய குழு அமைப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share