திருச்சி கிழக்கு (Trichy East) சட்டசபை தொகுதியில் போட்டியிடும் தவெக தலைவர் விஜய் (Vijay) நாளை ஏப்ரல் 2-ந் தேதி வேட்பு மனுத் தாக்கல் செய்கிறார். இதனைத் தொடர்ந்து திருச்சி மரக்கடை பகுதியில் விஜய் பிரசாரம் செய்கிறார்.
பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் விஜய் போட்டியிடுகிறார். பெரம்பூர் தொகுதியில் வேட்பு மனுத் தாக்கல் செய்த கையோடு பிரசாரத்தை தொடங்கினார் விஜய். பெரம்பூர், கொளத்தூர் தொகுதிகளில் மட்டும் பிரசாரம் செய்த விஜய், திட்டமிட்டபடி வில்லிவாக்கம் தொகுதியில் பிரசாரம் செய்யவில்லை.
இந்நிலையில் திருச்சி கிழக்கு தொகுதியில் நாளை வேட்பு மனு தாக்கல் செய்ய இருக்கிறார் விஜய்.
திருச்சிக்கு நாளை முற்பகல் 11 மணிக்கு விமானம் மூலம் வருகை தருகிறார் விஜய். அங்கிருந்து அரியமங்கலம் பகுதியில் மாநகராட்சி 2-வது மண்டல குழு அலுவலக வளாகத்தில் இருக்கும் தேர்தல் அதிகாரியின் அலுவலகத்தில் வேட்பு மனுவைத் தாக்கல் செய்கிறார்.
இதனையடுத்து திருச்சி மரக்கடை பகுதியில் தனியார் இடம் ஒன்றில் விஜய் பிரசாரம் செய்ய இருக்கிறார். இந்த கூட்டத்துக்கு வழக்கம் போல குழந்தைகள்- முதியவர்கள்- கர்ப்பிணி பெண்களை அழைத்துவரக் கூடாது என்பது உள்ளிட்ட நிபந்தனைகளை போலீசார் விதித்துள்ளனர்.
முன்னதாக, திருச்சி டிவிஎஸ் டோல்கேட், எம்ஜிஆர் சிலை, கேகே நகர், ஏர்போர்ட் வயர்லஸ் சாலை ஆகிய இடங்களில் ஒன்றில் விஜய் பிரசாரம் செய்வதற்கான அனுமதியை தவெகவினர் கேட்டிருந்தட்னர். தவெக மூத்த தலைவர்களான கே.ஏ. செங்கோட்டையன், கு.ப.கிருஷ்ணன் உள்ளிட்டோர் நேற்று திருச்சி போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு சென்று அனுமதி கோரியிருந்தனர். இதனையடுத்து திருச்சி மரக்கடை பகுதியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதி தரப்பட்டுள்ளது.
