ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியின மாணவர்கள் முதல்வரின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக விமானத்தில் அழைத்து வரப்பட்டனர். Tribal students surprise Stalin
இன்று (மார்ச் 1) தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தனது 72ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
இதையொட்டி திமுகவினர் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது, இனிப்புகள் வழங்குவது, முதல்வரை நேரில் வந்து சந்தித்து வாழ்த்து சொல்வது என கொண்டாடி வருகின்றனர்.
இதில் ஈரோடு மாவட்ட டி.என்.பாளையம் ஒன்றிய செயலாளர் சிவபாலன் முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு, பழங்குடியின மாணவர்களுக்காக எடுத்த முயற்சி பாராட்டை பெற்றுள்ளது. ஈரோட்டில் சோளகர், ஊராளிகள், இருளர், மலைக்கவுண்டர், லம்பாடி ஆகிய பழங்குடிகள் வாழ்ந்து வருகின்றனர்.
இதில், அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தூக்க நாயக்கன் பாளையம் ஒன்றியத்தில் உள்ள தொட்டகோம்பை, கரும்பாறை, வேதப்பாறை உள்ளிட்ட ஊராளி பழங்குடி கிராமங்களில் மாணவ மாணவிகளின் இடைநிற்றல் அதிகமாக உள்ளது.
இந்த கிராமங்களில் இருந்து மாணவ மாணவிகள் மேல்நிலை பள்ளிக்கோ கல்லூரிக்கோ செல்வது அரிதிலும் அரிதாக உள்ளது.

இந்தநிலையில் முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு கரும்பாறை, தொட்டக்கோம்பை, பகவதி நகர் பகுதிகளில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியைச் சேர்ந்த 6 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான 34 மாணவர்கள் விமானம் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டனர்.
சொந்த ஊரில் இருந்து கார் மூலம் கோவை விமான நிலையம் வந்து, அங்கிருந்து விமானம் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டனர்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பழங்குடியின மாணவர்கள் பிறந்தநாள் வாழ்த்து கூறினர். அப்போது கோரிக்கை மனு ஒன்றையும் அளித்தனர்.
“எங்கள் கிராமங்களில் போதிய சாலை வசதி, பேருந்து வசதி இல்லை. எனவே அவற்றை ஏற்படுத்தி தர வேண்டும்” என்று மனுவில் கேட்டுக்கொண்டனர்.
மனுவை பெற்றுக்கொண்ட முதல்வர் ஸ்டாலின், மாணவர்களின் கோரிக்கையை பரிசீலிப்பதாக உறுதி அளித்தார்.
இதன்பின் மாணவர்கள் அண்ணா நூலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கிருந்து சென்னையில் உள்ள அமைச்சர் முத்துசாமியின் வைகை இல்லத்துக்கு சென்று மதிய உணவு அருந்தினர்.
அங்கிருந்து மெரினா கடற்கரைக்கு அழைத்து செல்லப்பட்ட மாணவர்கள் கலைஞர் நினைவிடம், அருங்காட்சியகத்தை சுற்றிப்பார்த்தனர். கடல் அலையை கண்டு ரசித்து மகிழ்ந்தனர்.
இதுகுறித்து மாணவர்களுடன் வந்த ஆறு ஆசிரியர்களில் ஒருவரான நாகராஜன் மின்னம்பலத்திடம் கூறுகையில், “ இந்த சமூகத்தில் மாணவர்களின் இடைநிற்றல் அதிகமாக இருக்கிறது. 90 சதவிகித மாணவர்கள் உயர் படிப்புக்கே செல்வதில்லை. சொல்லப்போனால் 10ஆம் வகுப்புக்கு மேல் படிப்பதில்லை.
இவர்கள் எல்லாம் மலை அடிவாரத்தில் காட்டுப்பகுதியில் இருந்து வருகின்றனர். 8ஆம் வகுப்பு வரை அந்தந்த பகுதிகளில் படித்துவிட்டு 9 ஆம் வகுப்புக்கு செல்லும் போதுதான் சமவெளி பகுதிக்கே வருவார்கள்.

அவர்களின் வசதிக்காக தமிழக அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் மூலமாக எஸ்.கார்டு போட்டு வேன் ஏற்பாடு செய்திருக்கிறோம். இருந்தாலும் அவர்கள் பள்ளிக்கு வருவதில்லை. எனக்கு தெரிந்து இந்த பகுதியில் கல்லூரிக்கு செல்லும் மாணவர்களை பார்க்க முடியாது.
இந்த மாணவர்கள் சமவெளி பகுதி மாணவர்களோடு பழகக்கூட மாட்டார்கள். எனவே மாணவர்களின் நலன் கருதி அவர்களின் இடை நிற்றலை தடுக்க ஆசிரியர்கள் வீடு வீடாக பேச செல்வோம்.
ஆனால் மாணவர்களது அப்பா, அம்மாவை பார்க்க முடியாது. அவர்கள் காலை 4,5 மணிக்கெல்லாம் எழுந்து வேலைக்கு சென்றுவிடுவார்கள். இரவு 8 மணிக்குதான் வருவார்கள்.
இதுபோன்ற சூழலில் பழங்குடி மாணவர்களுக்கு வெளியுலகம் தெரிவதில்லை. கல்வி குறித்த விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறார்கள்.
எனவே அவர்களும் வெளியுலகத்தை பார்க்க வேண்டும். இதுபோன்ற விமான பயணம் மூலம் வெளியுலகம் எப்படி இருக்கிறது என்று தெரிந்துகொள்ள வேண்டும்.
அவர்கள் வசிக்கும் பகுதியை தாண்டி இந்த உலகம் எப்படி இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டு அவர்கள் அதில் இருந்து வெளியே வர வேண்டும். நன்றாக படிக்க வேண்டும். பழங்குடி மாணவர்களின் கல்வி மேம்பட வேண்டும் என்பதற்காகவே முதல்வர் பிறந்தநாளில் இந்த சுற்றலா பயணம் மேற்கொள்ளப்பட்டது.

மாணவர்கள் இடைநிற்றல் இல்லாமல் வந்தால் அடுத்த வருடமும் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்வோம் என்று உறுதி அளித்திருக்கிறோம்” என்றார்.
இன்று சென்னையை சுற்றி பார்க்கும் மாணவர்கள் இரவு 3 டையர் ஏசி கோச்சில் ரயில் மூலம் ஈரோடு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். அவர்கள் ரயிலில் பயணம் மேற்கொள்வதும் இதுவே முதன்முறை.
இன்றைய நாள் மிகவும் வித்தியாசமாக இருந்ததாக மாணவர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
மாணவர்களின் இந்த விமானம் மற்றும் ரயில் பயணத்துக்கான செலவை டி.என்.பாளையம் சிவபாலன் ஏற்றுக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. Tribal students surprise Stalin