transport union strike people affect
தமிழகம் முழுவதும் சிஐடியு, அண்ணா உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் இன்று (ஜனவரி 9) வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக சிஐடியு, அண்ணா உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் அறிவித்தன.
இதனை தொடர்ந்து தொழிற்சங்க நிர்வாகிகளுடன் அரசு தரப்பில் பல கட்ட பேச்சு வார்த்தை நடைபெற்றது. ஆனால் அதில் தீர்வு காணப்படவில்லை.
இந்தநிலையில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நல கமிஷனர் அலுவலகத்தில் தொழிலாளர் நல இணை கமிஷனர் ரமேஷ் தலைமையில் நேற்று (ஜனவரி 8) பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், திட்டமிட்டபடி இன்று முதல் வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் என்று சிஐடியு, அண்ணா உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் அறிவித்தன. அதேநேரத்தில், தொமுச, ஏஐடியுசி, ஐஎன்டியுசி உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் பங்குபெறவில்லை.
போக்குவரத்து கழக தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்த அறிவிப்பை முன்னிட்டு சென்னையில் உள்ள அனைத்து பணிமனைகளிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சென்னை ஆவடி, அம்பத்தூர் பணிமனைகளில் இருந்து பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்பட்டு வருகிறது. ஆலந்தூரில் 100 பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், இன்று 61 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி நகர பணிமனைகளில் காலை 6.30 மணி நிலவரப்படி 50 பேருந்துகளில் 49 பேருந்துகளும், நாகர்கோவிலில் உள்ள 4 பணிமனைகளில் இருந்து 268 பேருந்துகளில் 240 பேருந்துகளும்,
கடலூரில் 50 சதவிகித பேருந்துகளும் இயக்கப்பட்டு வருவதாக பேருந்து பணிமனை கோட்ட மேலாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து தொழிற்சங்க போராட்டத்தால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்லும் பயணிகள் அவதியடைந்துள்ளனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சென்னை: குடும்ப அட்டைகளில் திருத்தம் செய்ய குறைதீர் முகாம் எப்போது?
பியூட்டி டிப்ஸ்: வேக்ஸிங் செய்ய போறிங்களா… இந்த விஷயங்களை மறக்காதீங்க!
transport union strike people affect