கடலூர் அருகே செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது பயணிகள் ரயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். Train c
cident
கடலூர் செம்மங்குப்பத்தில் ரயில்வே கேட் திறந்து இருந்த நிலையில் இன்று ஜூலை 8 செவ்வாய்க்கிழமையன்று காலையில் பள்ளி வேன் தண்டவாளத்தை கடக்க முயன்றது. அப்போது விழுப்புரம்- மயிலாடுதுறை பயணிகள் ரயில் அதிவேகமாக வந்த நிலையில் பள்ளி வேன் மீது மோதி இழுத்துச் சென்றது. இதில் பள்ளி வேன் உருக்குலைந்து போனது.
இந்த விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். தனியார் பள்ளியில் படித்த நிமலேஷ், சாருலதா, செழியன் ஆகிய மாணவர்கள் 3 பேரும் உயிரிழந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதில் சாருலதா, செழியன் இருவரும் கடலூர் சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த திராவிடமணி என்பவரின் குழந்தைகள். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அக்கா, தம்பி இருவரும் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து நடந்த சம்பவ இடத்திலேயே சாருலதா உயிரிழந்தார். விபத்தில் படுகாயமடைந்த தம்பி செழியனுக்கு கடலூர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் செழியன் உயிரிழந்தார்.
இவ்விபத்தால் பள்ளிவேனில் இருந்த மாணவர்களின் புத்தகப்பைகள் உள்ளிட்ட உடைமைகள் அனைத்தும் ரயில்வே தண்டவாளத்தில் சிதறிக் கிடந்தன. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரயில்வே கேட்டை மூடாமல் கேட் கீப்பர் தூங்கிக் கொண்டிருந்ததால் இந்த கோர விபத்து நடந்ததா? அல்லது ரயில்வே கேட்டை மூட முயன்ற கேட் கீப்பரை தடுத்து ஓட்டுநர் தண்டவாளத்தை கடக்க முயற்சித்ததால் விபத்து நடந்ததா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
