தனது காதலியை குக்கரால் அடித்து கொலை செய்து விட்டு தலைமறைவான காதலனை பெங்களூரு போலீஸார் இன்று (ஆகஸ்ட் 28) கைது செய்துள்ளனர்.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த வைஷ்ணவ்(29) மற்றும் திருவனந்தபுரத்தை சேர்ந்த தேவி (24) இருவரும் காதலர்கள்.
பெங்களூரு கோரமங்களாவில் உள்ள தனியார் மார்க்கெட்டிங் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர். இருவரும் அங்கேயே வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து, கடந்த இரண்டு ஆண்டுகளாக லிவிங் டு கெதர் உறவில் ஒன்றாக வசித்து வந்தனர்.
இவர்களின் காதல் மற்றும் லிவிங் டு கெதர் வாழ்க்கை குறித்து தெரிந்த நிலையில் விரைவில் திருமணம் நடத்தி வைக்க இரு வீட்டாரும் முடிவு செய்திருந்தனர்.
இந்தநிலையில் தேவியிடம் நேற்று முன் தினம் (ஆகஸ்ட் 26) செல்போனில் பேச நினைத்த அவரது தங்கையால் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர், தனது பெற்றோருக்கு தெரிவித்து தனது அக்கா தங்கியிருந்த வீட்டு உரிமையாளரிடம் இதுகுறித்து பேசியுள்ளார்.
இதனையடுத்து அங்கு சென்று பார்த்த வீட்டு உரிமையாளர், திறந்து கிடந்த வீட்டின் உள்ளே தேவி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதுகுறித்து அவர் போலீசாருக்கு தெரிவித்த நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த பேகூர் போலீசார் தேவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் தப்பியோடிய காதலன் வைஷ்ணவை பிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர்.
தொடர்ந்து இரண்டு நாளாக வைஷ்ணவின் செல்போன் எண்ணை தொடர்ந்து டிராக் செய்து வந்தனர். இன்று அவர் இருக்கும் இடத்தை கண்டறிந்த போலீசார், அங்கு சென்று பதுங்கியிருந்த வைஷ்ணவை கைது செய்தனர்.
அவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்துள்ள பேகூர் போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், காதலி மீது கொண்ட சந்தேகத்தின் பேரில் இந்த கொலை நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கடந்த சில நாட்களாகவே காதலர்கள் தேவி -வைஷ்ணவ் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த 26ஆம் தேதி மாலை 5 மணியளவில் தேவி வேறு ஒரு ஆண் நபருடன் பேசி வருவதாக சந்தேகித்த வைஷ்ணவ் அவரிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த வைஷ்ணவ், காதலி தேவியை வீட்டில் இருந்த குக்கர் மூடியால் சரமாரியாக தாக்கி அடித்து கொலை செய்துள்ளார். பின்னர் காவல்துறை கைதுக்கு பயந்து அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகியுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
