தீவுத்திடலில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் நேற்று (டிசம்பர் 28) உயிரிழந்த நிலையில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ளது. காலை முதலே ஆயிரக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இதனால் தீவுத்திடல் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, சென்னை போக்குவரத்து காவல்துறை தீவுத்திடல் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்துள்ளனர்.
அதன்படி, “அனைத்து விஐபி மற்றும் விவிஐபி வாகனங்களும் காமராஜர் சாலை, நேப்பியர் பாலம், போர் நினைவு சின்னம், தீவுத்திடல் மைதானத்தின் இடதுபுற நுழைவு வழியாக அண்ணாசாலைக்கு செல்லும் சாலையில் அனுமதிக்கப்படும்.
மற்ற மூத்த கலைஞர்கள் பல்லவன் முனை மற்றும் வாலாஜா முனை (அண்ணாசாலை, கொடிப் பணியாளர் சாலை சந்திப்பு) வரை அனுமதிக்கப்படுவார்கள்.
தீவுத்திடல் மைதானம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில், போக்குவரத்து நெரிசலாக இருக்கும். எனவே, வாகன ஓட்டிகள் மாற்று வழியை தேர்வு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் கட்சிக் கேடர் வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் (போக்குவரத்து பேருந்துகள் மற்றும் மேக்சிகேப்கள்) அண்ணா சிலைக்கு அனுமதிக்கப்படும். மேலும் கட்சிக் குழுவினர் கடற்கரை சாலை வாகன நிறுத்துமிடத்திற்கு திருப்பி விடப்படுவார்கள்.
அனைத்து இலகு ரக வாகனங்கள் மற்றும் இருச்சக்கர வாகனங்கள், பெரியார் சிலை, சுவாமி சிவானந்தா சாலை, எம்எல்ஏ விடுதி சாலை வழியாக அனுமதிக்கப்படும்.
தீவுத்திடல் மைதானம், ஈ.வி.ஆர்.சாலை, அண்ணாசாலை, காமராஜர் சாலை, கோயம்பேடு மேம்பாலம், கோயம்பேடு, வடபழனியில் இருந்து திருமங்கலம் வரையிலான 100 அடி சாலை ஆகிய முக்கிய பகுதிகளுக்குள் வணிக வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை” என்று போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா