தூத்துக்குடி விமான நிலையத்தில் புதிய முனையத்தை திறந்து வைக்க பிரதமர் மோடி இன்று (ஜூலை 26) நேரில் பங்கேற்பதையொட்டி, போக்குவரத்தில் முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ரூ. 450 கோடி செலவில் தூத்துக்குடி விமான நிலையத்தில் உருவாக்கப்பட்ட புதிய முனையக் கட்டிடத்தை திறந்து வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று அம்மாவட்டத்திற்கு வருகை தருகிறார்.
தொடர்ந்து ரூ 4800 கோடிக்கும் அதிக மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார்.
பிரதமர் மோடியின் வருகையையொட்டி விமான நிலையம் மற்றும் கடலோர பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. தூத்துக்குடியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, விமான நிலையத்தை சுற்றி 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் பிரதமர் வருகையையொட்டி போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.
அதன்படி,
🔴சனிக்கிழமை மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி இடையே கனரக வாகனங்கள் மற்றும் சரக்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, வாகைக்குளம் விமான நிலைய சாலையில் எந்த வாகனமும் செல்ல அனுமதி இல்லை.
🔴தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலி அல்லது ஸ்ரீவைகுண்டம் செல்லும் வாகனங்கள், மங்களகிரி சந்திப்பில் வலது புறம் திரும்பி, மேல கூட்டடன்காடு, அல்லிகுளம், பேரூரணி, திம்மராஜபுரம், வர்த்தகரெட்டிபட்டி மற்றும் வாகைக்குளம் சந்திப்பு வழியாக செல்ல வேண்டும்.
🔴அதேபோல், திருநெல்வேலியில் இருந்து வரும் வாகனங்கள் வாகைக்குளம் சந்திப்பு, வர்த்தகரெட்டிபட்டி வழியாக சென்று, அதே பாதையில் திரும்பி மங்களகிரி சந்திப்பை அடையலாம். விமான நிலைய சாலையை தவிர்க்க வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டது.
🔴நிகழ்ச்சி நடைபெறும் நாளில், விஐபி-க்களின் வாகனங்கள் மட்டுமே விமான நிலைய வளாகத்திற்குள் அனுமதிக்கப்படும். விமான பயணிகள் விமானம் புறப்படுவதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்பே விமான நிலையத்திற்கு வருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
🔴பாஸ் வைத்திருப்பவர்கள் வாகைக்குளம் சுங்கச்சாவடி அருகே உள்ள வேலவன் நகர் வழியாக சென்று, பாஸ் வைத்திருப்பவர்களுக்கான பார்க்கிங் இடத்தில் வாகனத்தை நிறுத்த வேண்டும்.
பிரதமர் வருகையை முன்னிட்டு தூத்துக்குடியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்” என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
