எனக்காக சண்டை போட்டவர் டி.ஆர்.பாலு: நட்பை நினைவு கூர்ந்த முதல்வர்!

Published On:

| By Jegadeesh

கலைஞர் கைது செய்யப்பட்ட போது எப்படி காரை மறித்து சண்டையிட்டாரோ, அதற்கு முன் எனக்காக மிசா காலத்தில் சண்டையிட்டவர் டி.ஆர்.பாலு என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனக்கும் அவருக்குமான நட்பை நினைவு கூர்ந்துள்ளார்.

திமுக நாடாளுமன்றக் குழு தலைவரும், கட்சியின் பொருளாளருமான டி.ஆர்.பாலு எழுதிய பாதை மாறா பயணம் புத்தக வெளியீட்டு விழா நேற்று (ஜனவரி 7 ) நடைபெற்றது.

இந்த புத்தகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். முதல் பாகத்தை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியும், இரண்டாம் பாகத்தை வைரமுத்துவும் பெற்றுக் கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ’’தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக,திமுகவின் வளர்ச்சிக்காக டி.ஆர்.பாலு ஆற்றிய பணிகள் ஏராளமானவை. இந்த புத்தகத்தை எழுதியதற்காக டி.ஆர்.பாலுவை பாராட்டுகிறேன்.

ஏனென்றால் ஒரு செயலை செய்வது எவ்வளவு முக்கியமோ, அதனை பதிவு செய்வதும் முக்கியம். பதிவு செய்யவில்லை என்றால், அது காலத்தால் மறக்கடிக்கப்பட்டுவிடும்.

நெருக்கடி காலத்தின் போது சிட்டி பாபு, சிறை டைரி என்று ஒரு புத்தகத்தை எழுதினார். அந்த புத்தகம் இல்லையென்றால் நாங்கள் வாங்கிய அடிகள், சிட்டி பாபு செய்த தியாகங்களுக்கு சாட்சியம் இல்லாமல் போயிருக்கும்.

திமுகவின் முன்னோடிகள் அனைவரும் தங்களது போராட்டங்கள், தியாகங்கள், பணியாற்றிய தோழர்களின் பங்களிப்புகளை தொகுத்து நூலாக வெளியிட வேண்டும்.

1970களில் இளைஞராக டி.ஆர்.பாலுவை பார்த்த போது, நாங்கள் இருவரும் ‘வாடா போடா’ என்று சொல்லிக் கொள்ளும் அளவிற்கு நட்புடன் பயணித்தோம்.

முதல் முறையாக இளந்தென்றல் என்ற பட்டத்தை எனக்கு கொடுத்தவர் டி.ஆர்.பாலு தான். அதுதான் என் வாழ்க்கையில் பெற்ற முதல் பட்டம்.

நான் வீட்டில் இருந்ததைவிட டி.ஆர்.பாலு அலுவலகத்தில் இருந்த நேரம்தான் அதிகம். எனக்கு பேச்சு பயிற்சி களமாக அமைந்தது டி.ஆர்.பாலுவின் அண்ணா கலைக்கழகம் அமைப்பு தான். மிசா காலத்தில் எங்களின் நட்பு இன்னும் நெருக்கமாக மாறியது.

tr Balu who fought for me Chief Minister

கலைஞர் கைது செய்யப்பட்ட போது எப்படி காரை மறித்து சண்டையிட்டாரோ, அதற்கு முன் எனக்காக மிசா காலத்தில் சண்டையிட்டவர் டி.ஆர்.பாலு.

நாங்கள் ஒன்றாக திமுக கூட்டத்திற்கு செல்வோம். அப்படி சொல்லும் போது, எனக்கு வழங்கப்படும் வழிச்செலவை அவருக்கு கொடுப்பேன். எங்கேயும் இணை பிரியாமல் இருந்திருக்கிறோம்.

எங்களின் நட்பு மிசா விடுதலைக்கு பின் அதிகமாகியது. சென்னை மாவட்டச் செயலாளர் பதவிக்கு டி.ஆர்.பாலு போட்டியிட்ட போது, நானும் உதவி செய்தேன். அனைத்தையும் புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார்.

அவையனைத்திற்கும் டி.ஆர்.பாலுவின் உழைப்பு மட்டுமே காரணம். சிலர் அமைச்சர் பொறுப்பு இல்லையென்றால் சோர்ந்துவிடுவார்கள். ஆனால் டி.ஆர்.பாலு எப்போதும் அமைச்சர் போலவே கம்பீரத்துடன் இருப்பார் என்றார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

வேலைவாய்ப்பு : சென்னை மாநகராட்சியில் பணி!

அடுத்த மூன்று மணி நேரம்: எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share