மோடி தியானம்!
நாளை கடைசி கட்ட மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. குறிப்பாக பிரதமர் மோடியின் சொந்த தொகுதியான வாரணாசியிலும் தேர்தல் நடக்கிறது. இந்த நிலையில் மூன்று நாள் பயணமாக நேற்று கன்னியாகுமரி வந்த பிரதமர் மோடி விவேகானந்தர் மண்டபத்தில் தியானத்தை தொடங்கினார். இன்று (மே 31) இரண்டாவது நாளாக பிரதமர் மோடி தியானத்தில் ஈடுபடுகிறார். இதையொட்டி குமரி கடற்கரை சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வானிலை அப்டேட்!
தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும். தொடர்ந்து, ஜூன் 1 முதல் ஜூன் 3 வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக குறையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பிரஜ்வல் ரேவண்ணா கைது!
பாலியல் வழக்கில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா தலைமறைவாக இருந்த நிலையில், ஜெர்மனியில் இருந்து நேற்றிரவு பெங்களூரு வந்த அவரை போலீசார் விமான நிலையத்தில் வைத்து கைது செய்தனர். இன்று காலை 10 மணி அளவில் சிறப்பு விசாரணைக்குழு முன் அவர் ஆஜர்படுத்தவுள்ளார்.
பெட்ரோல்-டீசல் விலை!
சென்னையில் தொடர்ந்து 76வது நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75-க்கும், டீசல் ரூ.92.34-க்கும் விற்கப்படுகிறது.
ஆதார் பான் இணைப்பு கடைசி நாள்!
ஆதார் எண்ணுடன், பான் எண்ணை இணைப்பதற்கான அவகாசம் இன்று மே 31ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இன்றுக்குள் இணைக்காவிட்டால் , வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும்போது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று வருமான வரித்துறை எச்சரித்துள்ளது.
குரூப் தேர்வுக்கான இலவச பயிற்சி!
ஜூலை 13-ஆம் தேதி 90 பணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வும், செப்டம்பர் மாதம் 2030 பணியிடங்களுக்கான குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வும் நடைபெறவுள்ள நிலையில், திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இன்று இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்குகிறது.
இன்றைய ரிலீஸ்!
சூரி நடித்துள்ள கருடன், கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பில் ஹிட் லிஸ்ட், மற்றும் புஜ்ஜி அட் அனுப்பட்டி, தி அகாலி உள்ளிட்ட தமிழ் படங்கள் இன்று திரையரங்குகளில் வெளியாகின்றன.
கால்பந்து போட்டி!
சர்வதேச நட்பு ரீதியிலான மகளிர் கால்பந்தாட்டத்தில் இந்தியா – உஸ்பெகிஸ்தான் அணிகள், தாஷ்கன்ட் நகரில் வெள்ளிக்கிழமை மோதுகின்றன.
9 மாவட்டங்களில் மழை!
ஒருபக்கம் தமிழகத்தில் வெப்பம் அதிகரித்து வந்தாலும், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், சேலம், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், திருச்சி மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் ஜூன் 2ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உலக புகையிலை எதிர்ப்பு தினம்!
புகையிலைப் பயன்பாட்டினால் ஏற்படும் உடல்நல அபாயங்களை எடுத்துரைக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மே 31ஆம் தேதி உலக புகையிலை எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா : பாகற்காய்- வேர்க்கடலைக் குழம்பு!
டிடிஎஃப் வாசனுக்கு வாகனத்துல கண்டம்: அப்டேட் குமாரு