தக்காளி விற்கிற விலையில் தக்காளி குழம்பா என்று கேட்கலாம். ஆனால் இதன் ருசிக்கு விலையெல்லாம் ஒரு பொருட்டே இல்லை என்று சொல்ல வைக்கும். அனைவருக்கும் ஏற்ற இந்தத் தக்காளி குழம்பு, செட்டிநாட்டு சிறப்பு உணவில் இடம்பெறக் கூடியது.
என்ன தேவை?
- தக்காளி – 5 (நறுக்கவும்)
- வெங்காயம் – ஒன்று (நறுக்கவும்)
- பூண்டு – 10 (தட்டிக் கொள்ளவும்)
- மிளகாய்த்தூள் – ஒன்றரை டேபிள்ஸ்பூன்
- தேங்காய்த்துருவல் – 4 டேபிள்ஸ்பூன்
- சோம்பு – ஒரு டீஸ்பூன்
- முந்திரி – 10
- மல்லி (தனியா) – ஒரு டேபிள்ஸ்பூன்
- உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப
எப்படிச் செய்வது?
ஒரு வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி அதில் சோம்பு, மல்லி சேர்த்து நன்கு வாசம் வரும் வரை வறுக்கவும். முந்திரி சேர்த்து லேசாகச் சிவக்கும் வரை வறுக்கவும். பிறகு வெங்காயம், பூண்டு சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கி, பிறகு தக்காளி, மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு வேகும் வரை வதக்கவும். தேங்காய்த்துருவல் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கி ஆற விடவும். இந்தக் கலவையை மிக்ஸியில் நன்கு நைஸாக அரைத்துக் கொள்ளவும். மீண்டும் வாணலியில் எண்ணெய் சேர்த்து அரைத்த மசாலா, உப்பு சேர்த்து, குழம்பை நன்கு எண்ணெய் பிரியும் வரை கொதிக்கவிட்டு இறக்கவும்.
